194 ரன்கள்: உலக சாதனையை சமன் செய்த ஜிம்பாப்வே வீரர்

ஜிம்பாப்வே சென்றுள்ள வங்கதேச அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் வங்கதேசம் 2-1 என முன்னிலை பெற்றது. இந்நிலையில் நான்காவது போட்டி நேற்று புலவாயோ நகரில் நடந்தது.
இதில் ஜிம்பாப்வே முதலில் பேட் செய்தது. துவக்க வீரர் வெர்மூலன் 5 ரன்களுக்கு அவுட்டானார். இதையடுத்து மூன்றாவது வீரராக சார்லஸ் கவன்ட்ரி வந்தார். அதிரடியாக பேட் செய்த இவர் வரிசையாக சிக்சர்களும், பவுண்டரிகளுமாக விளாசினார். இவருக்கு மட்சிகின்யெரி (37 ரன்) ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்தார்.
மற்ற வீரர்கள் சொல்லி கொள்ளும்படி பேட் செய்யவில்லை என்றாலும் கவன்ட்ரி தொடர்ந்து சூப்பராக பேட் செய்தார். இவர் 7 சிக்சர், 16 பவுண்டரி உட்பட 156 பந்தில் 194 ரன்கள் எடுத்து, இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பாகிஸ்தான் வீரர் சையத் அன்வரின் 12 ஆண்டு கால சாதனையை சமன் செய்தார்.
இதையடுத்து ஜிம்பாப்வே 50 ஓவரி்ல் 8 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்தது.
கடின இலக்கை சேஸ் செய்த வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் அசத்தல் துவக்கம் தந்தார். இவர் 154 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதை நோக்கி அழைத்து சென்றார். சித்திக் 38, ஹசன் 35, மகமூத்துல்லா 21 ரன்கள் எடுத்தனர்.
வங்கதேசம் 47.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து வங்கதேசம் 3-1 என தொடரை கைப்பற்றியது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:29 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications