மும்பை: இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் எம்.எஸ்.டோணி தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. ராகுல் டிராவிட், கங்குலி ஆகியோருக்கு இதிலும் இடம் தரப்படவில்லை.
இலங்கைக்கு எதிராக ஆகஸ்ட் 18ம்தேதி தொடங்கும் ஐந்து ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் இந்தியா பங்கேற்கவுள்ளது.
டெஸ்ட் தொடரில் பங்கேற்காத டோணி, ஒரு நாள் தொடருக்கு திரும்பி வருகிறார். டோணி தலைமையிலான இந்திய அணியை இந்திய அணியின் தேர்வாளர்கள் இன்று மும்பையில் அறிவித்தனர்.
இதில் இஷாந்த் சர்மாவுக்குப் பதில் முனாப் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். அணியில் சச்சின் டெண்டுல்கர், ஜாகிர்கான் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவர்கள் இருவரும் கடந்த இரு ஒரு நாள் தொடர்களில் பங்கேற்கவில்லை.
டிராவிட் - கங்குலிக்கு ஸாரி!
வழக்கம் போல இந்த ஒரு நாள் தொடருக்கான அணியிலும் டிராவிட், கங்குலி ஆகியோர் சேர்க்கப்படவில்லை. அவர்களுக்கு இனிமேல் ஒரு நாள் போட்டிகளில் ஆடும் வாய்ப்பே இல்லை என்பதை இது மேலும் நிரூபிப்பதாக உள்ளது.
பார்த்திவ் படேலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஸ்ரீசாந்த் இடம் பெறவில்லை.
அணியில் முக்கிய சேர்க்கை 19 வயதான விராத் கோலி. இவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆவார். ஐபிஎல் டுவென்டி 20 தொடரில் டெல்லி அணியில் இடம் பெற்றிருந்தார்.
இலங்கை தொடருக்கான அணி தவிர பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொடருக்கான இந்திய அணி:
டோணி (கேப்டன்), யுவராஜ் சிங் (துணை கேப்டன்), வீரேந்திர ஷேவாக், கெளதம் கம்பீர், சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், விராத் கோலி, ஜாகிர் கான், பிரவீன் குமார், ஆர்.பி. சிங், பிரக்யான் ஓஜா, இர்பான் பதான், பார்த்திவ் படேல், முனாப் படேல்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணி:
டோணி (கேப்டன்), யுவராஜ் சிங் (துணை கேப்டன்), வீரேந்திர ஷேவாக், கெளதம் கம்பீர், சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், விராத் கோலி, ஜாகிர் கான், பிரவீன் குமார், ஆர்.பி. சிங், பிரக்யான் ஓஜா, இர்பான் பதான், இஷாந்த் சர்மா.