மும்பை : இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டவர் தான் ரஹானே. அவரை பிசிசிஐ ஆண்டு ஊதிய ஒப்பந்த பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கியது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் ரஹானே இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 224 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதில் சராசரி 44 என்ற அளவில் இருக்கிறது. ஸ்ட்ரைக் ரேட்டும் பிரமிக்கும் அளவில் இருக்கிறது. இந்த நிலையில் ரஹானே குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், இந்திய அணியில் ரகானே இடம்பெறுவதை காண நான் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வேறு இந்தியாவில் தான் நடைபெறுகிறது. அவர் விளையாடும் விதத்தை வைத்து பார்க்கும் போது இந்திய அணியில் அவரை சேர்த்தால் நிச்சயமாக தேர்வு குழுவினர் எடுக்கும் தைரியமான முடிவாக பார்க்கப்படும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ரஹானே சிறப்பாக விளையாடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ஒருநாள் கிரிக்கெட்டிலும் ரஹானேவை சேர்க்க வேண்டும். அவருக்கு உரிய ஆதரவை வழங்கினால் நிச்சயம் ஒரு நாள் கிரிக்கெட்டிலும் அவர் சாதிப்பார். நம்பர் நான்காவது இடத்தில் ரஹானே களம் இறங்கி இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள சுனில் கவாஸ்கர், ஸ்ரீசாந்த் சொன்னது மிகவும் நல்ல ஐடியா தான். ஆனால் இந்த தருணத்தில் இப்படி ஒரு முடிவை எடுப்பது நிச்சயம் சரி கிடையாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் வேண்டுமானாலும் நாம் இப்படி ரிஸ்க் எடுக்கலாம். ஆனால் ஒரு நாள் கிரிக்கெட்டில் ரகானே விட பல இளம் வீரர்கள்வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
என்னை கேட்டால் ருதுராஜ், மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரை தேவை ஏற்பட்டால் நடு வரிசையில் பயன்படுத்தி பார்த்துக் கொள்ளலாம். ஏனென்றால் தற்போது அவர்களுக்கு அணியில் தொடக்கத்தில் இடம் கிடைக்காது என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.