மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த், 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஸ்பாட் ஃபிக்சிங் சர்ச்சையில் சிக்கி கைது செய்யப்பட்டது குறித்தும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல்கள் குறித்தும் தனது மனைவி புவனேஸ்வரி குமாரியுடன் இணைந்து சமீபத்திய பேட்டி ஒன்றில் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.
2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்த், ஸ்பாட் ஃபிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அஜித் சண்டிலா மற்றும் அன்கீத் சவான் ஆகியோருடன் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும் கரும்புள்ளியாக அமைந்தது.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய ஸ்ரீசாந்த், தனது திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் கைது செய்யப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியதாகக் கூறினார். "2007ல் புவனேஸ்வரியை சந்தித்தபோதே, 2011 உலகக்கோப்பை வரை நான் அணியில் இருந்து விளையாடி, கோப்பை வென்றால் இந்த திருமணம் நடக்காது என்று நினைத்தேன். ஆனால், திருமணம் செய்தால் அது அவராகத்தான் இருக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். எல்லாம் சரியாக நடந்தது, நாங்கள் உலகக்கோப்பையை வென்றோம், திருமணமும் உறுதியானது" என்றார்.
"உலகக்கோப்பைக்குப் பிறகு, அவருக்கு நிறைய வரன்கள் வந்தன, நாங்கள் விரைவாக ஒரு முடிவை எடுக்க வேண்டியிருந்தது. 2012ல் எனக்கு ஆறு அறுவை சிகிச்சைகள் நடந்தன, நான் சக்கர நாற்காலியில் இருந்தேன். அப்போது அவருடைய தந்தையிடம், 'என்னால் மீண்டும் விளையாட முடியாமல் போகலாம், இப்போது என்னை ஒரு தீவிரவாதி என்றும் முத்திரை குத்திவிட்டார்கள்' என்று கூறினேன். ஒரே நேரத்தில் பல மோசமான சம்பவங்கள் நடந்தன" என்று தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
ஸ்ரீசாந்தின் கைது செய்தி குறித்து முதன்முதலில் அறிந்தபோது ஏற்பட்ட அதிர்ச்சியையும், குடும்பத்தில் ஏற்பட்ட சவால்களையும் அவரது மனைவி புவனேஸ்வரி பகிர்ந்து கொண்டார். "அவர் கைது செய்யப்படும் வரை என் தந்தைக்கு இது பற்றி எதுவும் தெரியாது. திடீரென்று என் நண்பர்கள் அனைவரும் என்னை தொலைக்காட்சியைப் பார்க்கச் சொன்னார்கள். அங்கே, 'ஸ்பாட் ஃபிக்சிங் வழக்கில் ஸ்ரீசாந்த் கைது' என்ற செய்தி ஓடிக்கொண்டிருந்தது. என் அப்பாவிடம் இதை எப்படிச் சொல்வது என்று திகைத்து நின்றேன். உடனடியாக அவருடைய சகோதரியை அழைத்தேன். அதற்குள் என் தந்தை என்னை வீட்டிற்கு வரச் சொன்னார்" என்று கூறினார்.
"நான் அவரிடம், 'முதலில் நான் சொல்வதைக் கேட்பேன் என்றும், திருமணத்தை நிறுத்த மாட்டேன் என்றும் எனக்கு சத்தியம் செய்யுங்கள்' என்று கேட்டேன். மேலும், 'கடவுளே நேரில் வந்து ஸ்ரீசாந்த் இதைச் செய்தார் என்று சொன்னால் கூட, நான் அதை நம்ப மாட்டேன்' என்றும் உறுதியாகக் கூறினேன்," என்று தனது கணவர் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.
2013 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியபோது ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டார். நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, அவர் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். இருப்பினும், பிசிசிஐ விதித்த வாழ்நாள் தடை காரணமாக, அவரால் மீண்டும் இந்திய அணிக்காக விளையாட முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.