கொச்சி: இந்திய கிரிக்கெட் வாரியம் தனக்கு விதித்துள்ள வாழ்நாள் தடையை எதிர்த்து கோர்ட்டில் வழக்குத் தொடர வேகப் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் மேட்ச் பிக்ஸிங் புகார் தொடர்பாக விசாரணை நடத்திய விசாரணை ஆணையம் அளித்த பரிந்துரையின் பேரில், ஸ்ரீசாந்த், அங்கித் சவான் ஆகிய இரு வீரர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் வாழ்நாள் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து ஸ்ரீசாந்த் பெரும் ஏமாற்றமும், அதிருப்தியும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த தடையை எதிர்த்து கோர்ட்டில் வழக்குத் தொர ஸ்ரீசாந்த் தரப்பு தயாராகி வருகிறது.

இதுகுறித்து ஸ்ரீசாந்த்தின் வழக்கறிஞர் ரிபெக்கா ஜான் கூறுகையில், ஸ்ரீசாந்த் தடையை எதிர்த்து கோர்ட்டை அணுகலாம் என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த தடை விவகாரத்தில் பிசிசிஐ தலைவர் என்.சீனிவாசனின் பங்கும் உள்ளது. அவரும் இதற்குப் பின்னால் இருந்துள்ளார். ஸ்ரீசாந்த்துக்கு இயற்கை நீதி மறுக்கப்பட்டுள்ளது. டெல்லி போலீஸார் கொடுத்த சில காகிதங்களை வைத்து அதன் அடிப்படையி்ல் தடை விதித்துள்ளனர். இது மிகவும் விநோதமாக இருக்கிறது.
கோர்ட் தீர்ப்பு வரும் வரையாவது அவர்கள் காத்திருந்திருக்கலாம். அதைக் கூட செய்யாமல் அவசர கதியில் இயங்கியுள்ளனர் என்றார்.