ஐபிஎல் சூதாட்ட புகார்.. சிறையில் தன் உயிரை காப்பாற்றிய மனைவி.. ஸ்ரீசாந்த் பரபரப்பு புகார்
திருவனந்தபுரம்: கேரளா எக்ஸ்பிரஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் சூதாட்டப் புகாரில் சிக்கி சிறைக்குச் சென்றார். இந்த இக்கட்டான சூழலில் போது, தனது மனைவி புவனேஸ்வரி தனக்கு அளித்த ஆதரவைப் பற்றி உருக்கமாகப் பேசிள்ளார். அந்த இக்கட்டான சூழ்நிலையில் தனது மனைவி கொடுத்த தைரியமே தன்னை தற்கொலை முடிவில் இருந்து காப்பாற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது, ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் புகாரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கித் சவான் மற்றும் அஜித் சண்டிலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பிசிசிஐ ஸ்ரீசாந்திற்கு வாழ்நாள் தடை விதித்தது. பின்னர் இந்தத் தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வழக்கு காலத்தில் உறுதுணையாக நின்ற மனைவி
இது குறித்து நேர்காணலில் பேசிய ஸ்ரீசாந்த், தனது வாழ்வின் மிகக் கொடூரமான காலகட்டத்தைக் கடக்க உதவிய தன் மனைவி புவனேஸ்வரி குறித்துப் பேசினார். "நான் சிறையில் இருந்தபோது, தற்கொலை செய்து கொள்ளாமல் இருந்ததற்கு மிக முக்கியக் காரணங்களில் ஒன்று அவர்தான். 2011 உலகக் கோப்பையை நாம் வென்றுவிட்டால், உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று 2010-ல் அவரிடம் நான் வாக்குறுதி அளித்திருந்தேன்," என்று ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
2007 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டின் ஒருநாள் உலகக் கோப்பை ஆகியவற்றை வென்ற இந்திய அணியில் ஸ்ரீசாந்த் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தார். 43 வயதான ஸ்ரீசாந்த், 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 87 விக்கெட்களும், 53 சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடி 75 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
10 சர்வதேச டி20 போட்டியில் விளையாடி 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் 44 ஆட்டங்களில் களமிறங்கி 40 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். பின்னர், தடைகள் நீங்கி மீண்டும் கிரிக்கெட் களத்திற்குத் திரும்பிய அவர், மார்ச் 2022 இல் தனது ஓய்வை அறிவித்தார்.
சுவாரஸ்யமான சந்திப்புகளும் திருமணமும்
தனது மனைவியுடனான சந்திப்புகள் குறித்துப் பேசிய ஸ்ரீசாந்த், "அவர் 10-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது முதல் முறையாகப் பார்த்தேன். அதில் இருந்து 2013 வரை நாங்கள் தொடர்பில் இருந்தோம். ஐந்து முக்கியச் சந்திப்புகள் எங்களது திருமணத்திற்கு வழிவகுத்தன. முதல் சந்திப்பு நான் சிறப்பு விருந்தினராகச் சென்ற பள்ளியில் நடந்தது.
இரண்டாவது சந்திப்பு அதற்கு அடுத்த நாளே கிரிக்கெட் மைதானத்தில் அமைந்தது. மூன்றாவது சந்திப்பு மூன்று ஆண்டுகள் கழித்து 2010-ல் நீச்சல் குளத்திற்கு அருகில் நடந்தது. நான்காவது சந்திப்பு இந்தூரிலும், ஐந்தாவது சந்திப்பான எங்களது திருமண நிச்சயதார்த்த முறை (ரோகா) நான் பிணையில் (Bail) வெளியில் வந்திருந்தபோது நடந்தது," என்றார்.
மேலும், தனது இக்கட்டான சூழ்நிலையிலும் திருமணத்திற்குச் சம்மதித்த மனைவியின் குடும்பத்தினருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். "2012-ல் எனக்கு கால் விரலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு, சக்கர நாற்காலியில் இருந்தேன். நரம்பு சம்பந்தப்பட்ட அறுவைச் சிகிச்சை என்பதால் பக்கவாதம் ஏற்பட 17 சதவீத வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்."
"அப்போது, என்னால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட முடியுமா என்று தெரியாததால் இப்போது திருமணம் செய்ய முடியாது என்று எனது மாமியாரிடம் கூறினேன். ஆனால், அத்தனை சவால்களையும் தாண்டி, என் வாழ்வின் மோசமான கட்டத்திலும் திருமணத்தை நடத்த அவர்கள் சம்மதித்தனர். நான் பிணையில் வெளிவருவதற்கும் அவரே முக்கியக் காரணம்," என்று ஸ்ரீசாந்த் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications

