மும்பை: 2008 ஐபிஎல் தொடரில் ஸ்ரீசாந்த் நடந்த சர்ச்சைக்குரிய விவகாரத்தை மையமாக வைத்து ஹர்பஜன் சிங் சமீபத்தில் ஒரு விளம்பரத்தில் நடித்து இருந்தார். அதன் மூலம் அவர் 1 கோடி ரூபாய் வரை சம்பாதித்துள்ளதாகவும், தன்னுடனான சர்ச்சையை வைத்து ஹர்பஜன் பணம் சம்பாதித்து வருவதாகவும் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தை கடும் கொந்தளிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
கடந்த காலங்களை மறந்து அவரை அண்ணனாக நினைத்த நிலையில், அந்த விளம்பரத்தை தனது சமூக வலைதளத்தில் பகிரும்படி ஹர்பஜன் சிங் கேட்டது ஸ்ரீசாந்தை மேலும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த விவகாரம் குறித்து மனம் திறந்துள்ள ஸ்ரீசாந்த், ஹர்பஜனுடனான தனது நட்பு முற்றிலும் முடிந்துவிட்டதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். இது கிரிக்கெட் உலகில் மீண்டும் ஒரு புயலை கிளப்பியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத ஒரு சம்பவம் 2008 ஏப்ரல் மாதத்தில் அரங்கேறியது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் முடிவில் கை குலுக்கும் போது ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்தார். இதனால் ஹர்பஜன் அந்த சீசன் முழுவதும் விளையாட தடை விதிக்கப்பட்டார். பல வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இருவரும் அந்த கசப்பான நிகழ்வை மறந்துவிட்டதாகவே கருதப்பட்டது. இருவரும் பல பேட்டிகளில் அது பற்றி மனம் திறந்து பேசி இருந்தனர்.
ஆனால், சமீபத்தில் ஹர்பஜன் சிங் அந்த அறையும் சம்பவத்தை நகைச்சுவையாக சித்தரித்து ஒரு விளம்பரத்தில் நடித்திருந்தார். இதற்காக அவர் 80 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த விளம்பரம் வெளியான பின், பழைய காயங்கள் மீண்டும் கிளறப்பட்டுள்ளதாக ஸ்ரீசாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், இதுவரை எந்த பேட்டியிலும் நான் ஹர்பஜன் பற்றி தவறாக பேசியதில்லை. சமீப காலம் வரை எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அந்த விளம்பரத்தில் நடித்து பணமாக்கியது மட்டுமல்லாமல், என்னை அழைத்து அதனை சமூக வலைதளத்தில் பகிரச் சொன்னார். தவறு செய்தவர்களை மன்னிக்கலாம், ஆனால் மறக்கக் கூடாது. மறந்தால் அவர்கள் மீண்டும் அதே தவறை செய்வார்கள் என்பதற்கு அவரே மிகப்பெரிய உதாரணம். நான் அவரை மன்னித்துவிட்டேன், ஆனால் ஒருபோதும் மறக்க மாட்டேன் என்று அவரிடமே நேரடியாக கூறிவிட்டேன் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், அவரை நான் ஒரு அண்ணனாகவே பார்த்தேன். ஆனால் இந்த விளம்பரத்திற்கு பிறகு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவரை இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்துவிட்டேன். இனி அந்த நபருடன் எனக்கு எந்த உறவும் இல்லை. அஸ்வின் போன்றவர்களுடனான பேட்டிகளில் அவர் எனது மகளைப் பற்றி பேசி தான் ஒரு சிறந்த மனிதர் என்பதைப் போல காட்டிக் கொள்கிறார். மக்கள் அவரை நல்லவர் என நினைக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவர் செய்வது எல்லாமே வெறும் நடிப்பு தான். அந்த நடிப்பை என்னால் ஏற்க முடியாது என மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த ஆண்டு முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி, 2008ல் நடந்த அந்த மோதல் சம்பவத்தின் வீடியோவை முதன்முறையாக வெளியிட்டார். இதன் மூலம் அடங்கியிருந்த சர்ச்சை மீண்டும் சூடுபிடித்தது. முன்னதாக ஹர்பஜன் சிங் இந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்திருந்தாலும், தற்போது அதனை வைத்து காசு பார்த்தது ஸ்ரீசாந்தை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. இதன் மூலம் இவர்களது பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது தெளிவாகியுள்ளது.