மும்பை : லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் கம்பீரும், ஸ்ரீசாந்த்தும் மோதிக்கொண்ட சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் தம்மை முறை தவறிய வார்த்தைகளை பயன்படுத்தி கம்பீர் திட்டியதாக ஸ்ரீசாந்த் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் ஒரு வீடியோவை வெளியிட்ட ஸ்ரீசாந்த், தம்மை பிக்ஸர் என்று கம்பீர் கூறியதாக சாடியிருந்தார். இதற்கு பதில் அளித்த கௌதம் கம்பீர் கவனத்தை தங்கள் மீது இருக்கும் வகையில் நடந்து கொள்பவர்களுக்கு சிரிப்பை மட்டுமே பதிலாக அளிக்கின்றேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் கம்பீர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியுள்ள ஸ்ரீசாந்த், இனி உங்கள் மீது மரியாதையை இல்லாமல் போய்விட்டது என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் ஒரு சகோதரன் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான எல்லையை நீங்கள் கடந்து விட்டீர்கள். அனைத்திற்கும் மேல் நீங்கள் மக்களின் பிரதிநிதியாக இருக்கிறீர்கள். எனினும் அதையும் மீறி மற்ற கிரிக்கெட் வீரர்கள் மீது உங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தி வருகிறீர்கள்.
உங்களுக்கு அப்படி என்னதான் பிரச்சனை. நீங்கள் என்னை திட்டிய போது நான் சிரித்துக் கொண்டு நடந்ததை கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் தொடர்ந்து நீங்கள் என்னை பிக்சர் சூதாட்டத்தில் ஈடுபட்டவன் என்று கூறுகிறீர்கள். உச்சநீதிமன்றமே எனக்கும் அந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லை எனக் கூறி விடுதலை செய்த பிறகு மீண்டும் என்னை அவ்வாறு கூறுவது சரிதானா? அப்படி அழைக்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்திருக்கிறது.
நீங்கள் என்னை மட்டும் திட்டவில்லை. நடுவர்கள் சக வீரர்கள் அனைவரையும் தானே திட்டினீர்கள். உங்களுடைய அகங்காரம் உங்கள் கண்ணை மறைத்து விட்டது. நீங்கள் யாருக்குமே மரியாதை கொடுப்பதில்லை. உங்களுக்காக ஆதரவாக நின்ற எனக்கும் மிகவும் மரியாதை தரவில்லை. இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு வரை உங்கள் மீது நான் அளவற்ற மரியாதையை வைத்திருந்தேன். ஆனால் அது அனைத்தும் இன்று போய்விட்டது.
என்னை நீங்கள் பிக்சர் என்று ஒரு முறை கூறவில்லை. ஏழு மற்றும் எட்டு முறை கூறி விட்டீர்கள். மேலும் ஆபாசமான சில வார்த்தைகளையும் என்னையும் நடுவரை நோக்கியும் நீங்கள் பயன்படுத்தினீர்கள். தொடர்ந்து என் கோபத்தை நீங்கள் சீண்டினீர்கள். நான் பொறுத்துக் கொண்ட அளவில் வேறு யாரும் அந்த இடத்தில் இருந்திருந்தால் நிச்சயம் அமைதியாக போயிருக்க மாட்டார்கள்.
உங்களை மன்னித்திருக்கவும் மாட்டார்கள். உங்களுக்கு நீங்கள் என்ன தவறு செய்தீர்கள் என்று தெரியும். இதனால் கடவுள் உங்களை நிச்சயமாக மன்னிக்க மாட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு நீங்கள் களத்திற்கு வரவே இல்லை. அனைத்தையும் கடவுள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் என்று ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.