ஹைதராபாத்: 2025 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளது. இதுவரை எட்டு போட்டிகளில் விளையாடி, இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று இருக்கிறது. ஆனாலும் அந்த அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி, 2024 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எப்படி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திலிருந்து முன்னேறி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதோ, அதேபோல நாங்களும் முன்னேறுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2024 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சிறப்பாக விளையாடி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி, பின்னர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. அதேபோல இந்த ஆண்டு சிறப்பாக ஆடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதே கேப்டன் கம்மின்ஸ் தலைமையில் விளையாடி வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது. இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும் பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோகும் சூழ்நிலை உள்ளது.

அதேபோல், 2024 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான் விளையாடிய முதல் ஏழு போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றிருந்தது. அதன் பிறகு தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. அது மிகப்பெரிய ஆச்சரியமான விஷயமாக இருந்தது. அதேபோன்ற ஒரு செயல்பாட்டை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் செய்யும் என டேனியல் வெட்டோரி தற்போது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசுகையில், "ஐபிஎல் தொடர் நீண்ட காலமாக நடந்து வருகிறது. நிறைய அணிகள் நாங்கள் இருக்கும் இப்போதைய சூழ்நிலையில் இருந்துள்ளன. சில அணிகள் அதிலிருந்து மீண்டு வந்தும் உள்ளன. கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆடியதை பார்த்தால் நமக்கு புரியும். அப்போது அந்த அணி துவக்கத்தில் மோசமாக விளையாடி, அதன் பிறகு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. அதை நாங்கள் எங்களுக்கு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வோம். மும்பை இந்தியன்ஸ் அணியும் சில சமயம் இதுபோல செய்திருக்கிறது." என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஒரே ஒரு சிறந்த ஆட்டம் தான் இதற்குத் தேவைப்படும். எங்கள் அணியில் இதுவரை ஒட்டுமொத்தமாக நாங்கள் சிறப்பான செயல்பாட்டை அளிக்கவில்லை. நாங்கள் வெற்றி பெற்ற இரண்டு போட்டிகளில் மட்டும் தான் அப்படி விளையாடினோம். எனவே,நாங்கள் இனி பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என மூன்று துறைகளிலும் அதிரடியாக முன்னேற வேண்டும்" என்றார்.