IPL 2025: சோலி முடிந்தது.. கடப்பாரை டீமை கதற விட்ட சிராஜ், கிஷோர்.. மானத்தை காப்பாற்றிய கம்மின்ஸ்
ஹைதராபாத்: 2025 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மீண்டும் 250 ரன்களை எட்டுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த அணி படுமோசமாக விளையாடி 152 ரன்கள் எடுக்கவே திணறியது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் ஓவரிலேயே அதிரடி பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை இழந்தது. முகமது சிராஜ் வீசிய பந்தில் அவர் எட்டு ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து அபிஷேக் ஷர்மா 18 ரன்கள் எடுத்தும், இஷான் கிஷன் 17 ரன்கள் எடுத்தும், நிதிஷ் குமார் ரெட்டி 31 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழந்தனர்.

ஹென்ரிச் கிளாசன் 19 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். ஆனால் அவரும் சாய் கிஷோர் வீசிய பந்தில் பவுல்ட் அவுட் ஆனார். அதன் பின் அனிகேத் வர்மா 18 ரன்கள், கமிந்து மெண்டிஸ் 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். கேப்டன் பாட் கம்மின்ஸ் கடைசி நேரத்தில் அணியின் ஸ்கோரை உயர்த்த தனி ஆளாக போராடினார்.
கம்மின்ஸ் 9 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். முகமது ஷமி கடைசி ஓவரில் இரண்டு பந்துகளை சந்தித்து அதில் ஒரு சிக்ஸரை அடித்தார். கம்மின்ஸ் மற்றும் ஷமி மட்டுமே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் 200 என்ற ஸ்ட்ரைக் ரேட்டை தாண்டி ரன் சேர்த்த பேட்ஸ்மேன்கள் ஆவர். அவர்களால் அந்த அணி 150 ரன்களை தாண்டியது.
இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் அபாரமாக செயல்பட்டனர். முகமது சிராஜ் நான்கு ஓவர்களில் 17 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை அள்ளினார். பிரசித் கிருஷ்ணா நான்கு ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சாய் கிஷோர் 4 ஓவர்களில் 24 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர்கள் மூவரின் பந்துவீச்சில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மொத்தமாக சரிந்தது. 20 ஓவர் முடிவில் அந்த அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.


Click it and Unblock the Notifications