Siraj: “இந்திய அணியில் நடந்ததை ஜீரணிக்கவே முடியலை”.. ஆட்டநாயகன் விருது வென்றவுடன் பொங்கிய சிராஜ்
ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் நான்கு விக்கெட்களை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த முகமது சிராஜ் இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அப்போது தனக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து மனம் நொந்து பேசினார்.
இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது முகமது சிராஜ் முதல் ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தி திருப்பத்தை ஏற்படுத்தினார். அதை தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய அவர் நான்கு ஓவர்களில் 17 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்களை சாய்த்தார். பின்னர் சன்ரைசர்ஸ் அணி 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி அதை 16.4 ஓவர்களில் எட்டி வெற்றி பெற்றது.

இதன் முடிவில் முகமது சிராஜ் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அதன் பின்பு அவர் பேசுகையில், "இது எனது சொந்த மைதானம் (ஹைதராபாத்). எனவே, எனக்கு இது சிறப்பான அனுபவத்தை அளித்துள்ளது. இங்கு கூட்டத்தில் எனது குடும்பத்தினரும் இருக்கிறார்கள். அது எனது ஆட்டத்தை மேலும் உயர்த்த உதவியது."
"நான் ஏழு ஆண்டுகளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடி இருக்கிறேன். எனது பந்துவீச்சிலும், எனது மனநிலையிலும் நான் நிறைய வேலைகளை செய்து இருக்கிறேன். அது இப்போது சிறப்பாக எனக்கு உதவி செய்கிறது. ஒரு சமயம் எனக்கு சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம் கிடைக்காதது ஜீரணிக்க முடியாததாக இருந்தது."
"ஆனால் நான் எனது மனநிலையை மாற்றிக் கொண்டு எனது உடல் தகுதி மற்றும் ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்ள வேலை செய்தேன். நான் என்ன தவறு செய்திருந்தாலும் அதை முன்னேற்றிக் கொண்டு எனது பந்துவீச்சை அனுபவித்து வீசினேன். ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக இந்திய அணியில் தொடர்ந்து நமக்கு இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் எப்போதுமே இருக்கும். ஆனால் என்னை நானே தேற்றிக்கொண்டு ஐபிஎல் இல் விளையாட வந்தேன்."
"நாம் என்ன பந்து வீச முயற்சி செய்கிறோமோ அதை சரியாக செய்தால் நாம் உச்சத்தில் இருக்கலாம். பந்தை இன் ஸ்விங் மற்றும் அவுட் ஸ்விங் செய்தால் அது நிச்சயம் வேலை செய்யும். இது எனக்கு நல்ல அனுபவமாக உள்ளது" என்றார் சிராஜ்.


Click it and Unblock the Notifications