ஐதராபாத்: ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரர் இஷான் கிஷன் நடுவர் அவுட் கொடுப்பதற்கு முன்பாகவே அவுட் என்று நம்பி பெவிலியனை நோக்கி நடந்து சென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் ரீப்ளேவில் சோதனை செய்த போது, பந்து பேட்டிலேயே படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் போல்ட் வீசிய 2வது ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன்பின் நட்சத்திர வீரரான இஷான் கிஷன் களம் புகுந்தார். அந்த ஓவரிலேயே அபிஷேக் சர்மா அபாரமாக ஒரு சிக்சரை விளாசி, ஐதராபாத் அணி பக்கம் ஆட்டத்தை திருப்பினார். ஆனால் தீபக் சஹர் வீசிய 3வது ஓவரின் முதல் பந்து இஷான் கிஷனுக்கு பின் பக்கமாக சென்றது. அதனை விக்கெட் கீப்பர் ரிக்கல்டன் எளிதாக பிடித்தார்.
அப்போது நடுவர் ஒய்டு கொடுப்பதற்காக கைகளை உயர்த்திய போது, திடீரென இஷான் கிஷன் நடக்க தொடங்கினார். இதனால் உடனடியாக மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பவுலர் தீபக் சஹர் ஆகியோர் அவுட் கோரிக்கை வைத்தனர். இதன்பின் நடுவர் உடனடியாக அவுட் கொடுக்க, அங்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை.
டிஆர்எஸ் கூட எடுக்காமல் இஷான் கிஷன் உடனடியாக பெவிலியன் செல்ல, அவரது தலையில் தட்டிக் கொடுத்து ஹர்திக் பாண்டியா அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து இஷான் கிஷன் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த நிலையில் இஷான் கிஷனுக்கு வீசப்பட்ட பந்தை ஸ்னிக்கோமீட்டரில் சோதனை செய்தனர்.
அப்போது தீபக் சஹர் வீசிய பந்து இஷான் கிஷனின் பேட்டில் கூட படவில்லை என்பது தெரிய வந்தது. பேட்டிலேயே படாமல் இஷான் கிஷன் எதற்காக நடந்து சென்றார், எதற்காக டிஆர்எஸ் அப்பீல் கூட செய்யவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் ரசிகர்கள் இஷான் கிஷனின் விஸ்வாசம் எப்போதும் அம்பானிக்கு தான் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.