ஹைதராபாத் : பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் இஷான் கிஷன் பந்து எங்கே? என தெரியாமல் தேடிய சம்பவம் அரங்கேறியது. அதுவும் இந்த சம்பவம் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் செய்தபோது முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே நடந்தது. பின்னர் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஓடி வந்து பந்தை எடுத்து நிலைமையை சமாளித்தார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
2025 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் ப்ரியான்ஷ் ஆர்யா களமிறங்கினர். முதல் ஓவரை முகமது ஷமி வீசினார்.

முதல் ஓவரின் இரண்டாவது பந்தை பிரப்சிம்ரன் சிங் நேராக அடித்தார். இஷான் கிஷன் ஓடி வந்து பந்தை தடுக்க முயன்றார். ஆனால், பந்து அவரது கைகளில் இருந்து நழுவி சிறிது தூரம் சென்றது. ஆனால், பந்தை பிடிக்க ஓடிவந்த வேகத்தில் இஷான் கிஷன் பந்து தனது கைகளில் இருந்து நழுவி எங்கே செல்கிறது என்பதை பார்க்கவில்லை.
பந்து கீழே இருந்த விளம்பர அச்சுக்கு மேலே இருந்தது. அந்த விளம்பரம் வெள்ளை நிறத்தில் இருந்தது, பந்தும் வெள்ளை நிறத்தில் இருந்ததால் இஷான் கிஷனால் பந்தை அடையாளம் காண முடியவில்லை. அவர் சுற்றி முற்றி பந்து எங்கே எனப் பார்த்தார். இந்த காட்சிகள் சிரிப்பை வரவழைக்கும் வகையில் இருந்தது.
ஒரு வகையில் இஷான் கிஷன் மோசமாக ஃபீல்டிங் செய்ததாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரை விமர்சித்தும் இருந்தனர். உடனடியாக வேறு இடத்தில் இருந்து ஓடி வந்த கேப்டன் பாட் கம்மின்ஸ் அந்த பந்தை எடுத்து வீசினார். அதனால் இரண்டு ரன்களுடன் அந்த சம்பவம் முடிவுக்கு வந்தது.
அந்த விளம்பரப் அச்சும் வெள்ளை நிறத்தில் இருந்ததால் தான் இஷான் கிஷனால் பந்தை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை என சிலர் இதற்கு விளக்கமும் அளித்து வருகின்றனர். இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது.
246 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிரடியான துவக்கத்தை பெற்றது. அந்த அணியின் ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா முதல் விக்கெட்டுக்கு 171 ரன்களை சேர்த்தனர். ட்ராவிஸ் ஹெட் அரை சதம் அடித்து 67 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அபிஷேக் ஷர்மா 40 பந்துகளில் சதம் அடித்தார். சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது.