சேப்பாக்கம் : ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக சிக்ஸர்களை விட்டுக் கொடுத்த பந்து வீச்சாளர்கள் வரிசையில் யுஸ்வேந்திர சாஹல் முதல் இடத்தை பிடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளரான சாஹல், தற்போது அதிக சிக்ஸர்களை விட்டுக் கொடுத்த பந்துவீச்சாளராக மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார்.
2024 ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் இரண்டாவது தகுதிப்போட்டியில் மோதியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சாஹல் 4 ஓவர்களில் 34 ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.

அவரது பந்துவீச்சில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் மூன்று சிக்ஸர்களை அடித்தனர். அதன் மூலம் ஐபிஎல் தொடரின் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விட்டுக் கொடுத்த பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார் யுஸ்வேந்திர சாஹல். அவரது பந்துவீச்சில் மட்டும் 224 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன.
அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் பியூஷ் சாவ்லா. அவரது பந்துவீச்சில் 222 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் இந்தியாவின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா (206 சிக்ஸர்கள்), ரவிச்சந்திரன் அஸ்வின் (202 சிக்ஸர்கள்) உள்ளனர். இந்த பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இருக்கும் பந்து வீச்சாளர்கள் அனைவருமே சுழற் பந்துவீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமின்றி ஒரே ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்களை விட்டுக் கொடுத்த பந்து வீச்சாளர்கள் பட்டியலில் சாஹல் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 2024 ஐபிஎல் தொடரில் மட்டும் அவர் 30 சிக்ஸர்களை விட்டுக் கொடுத்துள்ளார். முன்னதாக 2022 இல் முகமது சிராஜ் 31 சிக்ஸர்களை விட்டுக் கொடுத்து முதலிடத்தில் இருக்கிறார். அதே 2022 ஐபிஎல் தொடரில் வானிந்து ஹசரங்கா 30 சிக்ஸர்களை விட்டுக் கொடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார். தற்போது சாஹல் அவருடன் இணைந்து இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் 205 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கும் சாஹல், ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.