கொழும்பு: இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். 2026 டி20 உலகக் கோப்பை வரை அவர் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா செயல்பட்டு வந்தார்.
அவரது தலைமையில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை குவித்ததை அடுத்து அவருக்கு நிரந்தர பதவியை அளித்து இருக்கிறது இலங்கை கிரிக்கெட் அமைப்பு. சனத் ஜெயசூர்யா தான் ஆடிய காலத்தில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் வீரர்களில் ஒருவராக விளங்கினார். ஒரு கட்டத்தில் உலகின் சிறந்த இடது கை அதிரடி பேட்ஸ்மேன் என்ற புகழுடன் விளங்கினார்.

சனத் ஜெயசூர்யா, குமார் சங்ககாரா, மகிளா ஜெயவர்த்தனே, முத்தையா முரளிதரன், சமிந்தா வாஸ், திலகரத்னே தில்ஷன் என ஜாம்பவான் வீரர்களால் நிறைந்து இருந்த இலங்கை அணி கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட்டில் மிகப்பெரும் சரிவை சந்தித்து வந்தது. 2023 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் படுதோல்வி, 2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையில் குரூப் சுற்றுடன் வெளியேற்றம், 2024 டி20 உலகக் கோப்பையில் மோசமான தோல்விகள் என வரிசையாக முக்கிய தொடர்களில் இலங்கை அணி சரிவை சந்தித்து வந்தது.
இந்த நிலையில், அந்த அணியின் முந்தைய பயிற்சியாளர் குழு நீக்கப்பட்டு, தற்காலிக பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டு இருந்தார். அதன் பின், இலங்கை அணி இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது. அதன் பின் இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்றது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என முழுமையாக வென்றது.
சனத் ஜெயசூர்யா தலைமையில் இலங்கை அணி முக்கிய அணிகளுக்கு எதிராக தொடர்ந்து வெற்றி பெற்று இருப்பதால் அவருக்கு 2026 டி20 உலகக் கோப்பை வரையில் தலைமை பயிற்சியாளர் பதவியை அளித்துள்ளது இலங்கை கிரிக்கெட் அமைப்பு. தற்போது ஜெயசூர்யாவின் வரவால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
இனி வரும் டெஸ்ட் போட்டிகளில் அந்த அணி தொடர்ந்து வெற்றிகளை பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் முன்னேற வாய்ப்பு உள்ளது. மேலும், 2026 டி20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. சொந்த மண்ணில் நடக்கும் அந்த உலகக் கோப்பையை வெல்லவும் திட்டமிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அமைப்பு, ஜெயசூர்யாவை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.