டி20 உலககோப்பை 2026: இலங்கை அணியின் பயிற்சியாளராக யாக்கர் கிங் மலிங்கா நியமனம்
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராக, முன்னாள் நட்சத்திர வீரர் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார். 2026 டி20 உலகக் கோப்பையை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்றால், வேகப்பந்துவீச்சுத் திறனை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 15, 2025 முதல் ஜனவரி 25, 2026 வரை ஒரு மாத காலத்திற்கு, ஆலோசக வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராக மலிங்கா செயல்படுவார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் இந்த உலகக் கோப்பைத் தொடர், பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கோவிட்-19 காரணமாக முடங்கும் ஒரு வாரத்திற்கு முன், 2020ஆம் ஆண்டு லசித் மலிங்கா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2026க்காக இலங்கையின் தேசிய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மலிங்கா பயிற்சி அளிப்பார். மலிங்காவின்சர்வதேச அனுபவத்தையும், குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் டெத் பவுலிங்கில் அவரது யுத்தியையும் பயன்படுத்தி, வரவிருக்கும் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
மலிங்கா, காலம் கண்ட சிறந்த டி20 வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இலங்கைக்காக 84 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 107 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 6 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் வீழ்த்தியது அவரது சிறந்த சாதனையாகும். ஐபிஎல் வரலாற்றிலும் அவர் ஒரு ஜாம்பவான். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 122 போட்டிகளில் 170 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். தற்போது, ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகப் பணியாற்றுகிறார்.
வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில், இலங்கை அணி பி பிரிவில் ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, அயர்லாந்து மற்றும் ஓமன் ஆகிய அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. சனத் ஜெயசூரியா பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள இலங்கை, பிப்ரவரி 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, கொழும்பின் ஆர். பிரேமதாசா மைதானத்தில் அயர்லாந்துக்கு எதிராக தனது உலகக் கோப்பை பயணத்தைத் தொடங்குகிறது.
உலகக் கோப்பைக்கு முன், இலங்கை அணி பாகிஸ்தானுடன் ஜனவரி 7ஆம் தேதி தொடங்கி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. பாகிஸ்தான் ஏற்கனவே தங்கள் அணியைப் பெயரிட்டுள்ளது, ஆனால் இலங்கை இன்னும் அதை அறிவிக்கவில்லை. கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையில் இலங்கை சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறாத நிலையில், இந்த முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியினர் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications