கொல்கத்தா: இருபது ஒவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது
20 ஒவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 'சூப்பர் 10' சுற்றின் 4-வது ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

ஆப்கன் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக முகமது ஷெஸாதும், நூர் அலி ஜட்ரானும் களமிறங்கினர். இதில் 12 பந்துகளுக்கு 8 ரன்கள் எடுத்திருந்த ஷெஸாத் மேத்யூஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து அஸ்கர் ஸ்தனிக்சா களமிறங்க, மறுமுனையில் 20 ரன்களுடன் நின்றிருந்த நூர் அலியை ரங்கனா ஹெராத் பெவிலியனுக்கு அனுப்பினார். அஸ்கர் நிலைத்து ஆடி வந்த நிலையில், நூர் அலியைத் தொடர்ந்து வந்த கரீம் சாதிக் ரன்கள் ஏதும் இன்றி ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்களும் சொற்ப ரன்னில் அவுட் ஆகி வெளியேறினர்.
இதனால் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது. இலங்கை சார்பில் பெரைரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆப்கன் அணியில் அதிகபட்ச ரன்னாக் ஸதனிக்சா ஸ்தனிக்சா (62), ஷேன்வாரி (31), நூர் அலி ஜட்ரான் (20) ரன்களும் சேர்த்தனர்.
ஆப்கானிஸ்தான் அணியைத் தொடர்ந்து களமிறங்கிய அணிக்கு தில்ஷனும், சண்டிமாலும் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் குவித்தது. சண்டிமால் 18 ரன்களில் வெளியேற அடுத்து வந்த திரிமண்ணே 6 ரன்களில் அவுட்டானார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், அனுபவ வீரர் தில்ஷன் நிலைத்து நின்று விளையாடி ரன் குவித்தார். அவருக்கு உறுதுணையாக கேப்டன் மேத்யூஸ் கடைசி வரை களத்தின் நின்றார். இறுதியில் இலங்கை அணி 18.5 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தில்ஷன் 83 ரன்களுடனும், மேத்யூஸ் 21 ரன்களுடனும் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர்.