
இலங்கை தொடர்
இந்திய ஏ அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும், புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். இதில் இளம் வீரர்கள் தேவ்தத் படிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், நிதிஷ் ராணா, கிருஷ்ணப்பா கவுதம், சேட்டன் சக்காரியா, வருண் சக்கரவர்த்தி ஆகிய 6 வீரர்களுக்கு தங்களது முதல் சர்வதேச போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஊதிய ஒப்பந்தம்
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான இலங்கை அணியை அறிவிக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தாமதப்படுத்தி வருகிறது. இதற்கு காரணம் அந்நாட்டு வீரர்களின் ஊதிய ஒப்பந்தம் தான். வீரர்களின் செயல்பாட்டிற்கு ஏற்றவாறு ஊதியம் வழங்கப்படும் என்ற முறையை கொண்டு வந்தது. ஆனால் இதற்கு இலங்கை வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்னை முடியும் வரை ஒவ்வொரு தொடருக்கும் தனித்தனியாக ஒப்பந்தம் போட முடிவு செய்யப்பட்டது.

வீரர்கள் போர்க்கொடி
எனினும் பிரச்னைக்கு தீர்வு காணாமல் எதிலும் கையெழுத்திடப் போவதில்லை எனக்கூறி
ஏற்கனவே 5 வீரர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே அணியில் சேர்க்கப்படுவார்கள் என இலங்கை வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருக்கும் வீரர்கள் இன்று நடைபெறும் 3வது ஒருநாள் போட்டிக்கு பின்னர் கையெழுத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்களிலும் சிலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட அதிருப்தியில் தான் இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக 2ம் தர அணியுடன் விளையாட வேண்டுமா என்ற கோபத்திலும் உள்ளனர்.

திடீர் திட்டம்
இதனால் இந்தியாவுக்கு எதிரான தொடரில் இலங்கையின் முதல் தர வீரர்கள் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது. எனவே இலங்கையும். சில சீனியர் வீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு, இலங்கை 'ஏ' அணியை களமிறக்கும் யோசனையில் உள்ளது. இன்று இலங்கை - இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி முடிந்தவுடன் அதற்கு விடை தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications











