கொழும்பு: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இலங்கை அணியை ஆட வைக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம், சமீபத்தில் இலங்கை அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என வென்றுள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை புள்ளி பட்டியலில் முதல் எட்டு இடங்களில் இடம் பிடித்த அணிகள் நேரடியாக சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெற்று இருக்கின்றன. 2023 உலக கோப்பையின் போது இலங்கை அணி அந்த புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்தது. அதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் பயிற்சி பெறும் வகையில் ஆஸ்திரேலியா அணி இலங்கை அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 214 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த போட்டியில் ஆஸ்திரேலியா எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 165 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அடுத்து நடந்த இரண்டாவது போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 281 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அதிர்ச்சி அளிக்கும் வகையில் 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 174 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
இதை அடுத்து இலங்கை அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடி இருக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம் பெற்றிருக்கும் அணிகளில் அதிக பலம் இல்லாத அணியாக பார்க்கப்படுவது வங்கதேசம் தான். எனவே வங்கதேச அணிக்கு பதிலாக இலங்கை அணியை விளையாட வைக்க வேண்டும் என சிலர் கூறி வருகின்றனர்.
அதற்கான சாத்திய கூறுகள் இல்லை என்றாலும் இது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. 2023 ஒருநாள் போட்டி உலக கோப்பை வரை இலங்கை அணி படு மோசமான தோல்விகளை சந்தித்து வந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி இருக்கிறது. இலங்கை அணி வரிசையாக பல்வேறு கிரிக்கெட் தொடர்களையும் வென்று வருகிறது.