
எத்தனை மேட்சுகள்?
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவிருக்கிறது. ஜூலை 13ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. 2 மற்றும் 3வது ஒரு நாள் போட்டி ஜூலை 16, 18 தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் டி20 போட்டிகள் ஜூலை 21, 23 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் அனைத்து கொழும்புவில் உள்ள ப்ரேமதசா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

டிராவிட் பயிற்சியின் கீழ்
இந்த தொடருக்கான இந்திய 20 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் ஷிகர் தவான் ( கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் பட்டிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ் ராணா, இஷான் கிஷான் ( கீப்பர்), சஞ்சு சாம்சன் ( விக்கெட் கீப்பர்), யுவேந்திர சாஹல், ராகுல் சஹார், கிருஷ்ணப்பா கவுதம், க்ருணால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்வர் குமார் ( துணை கேப்டன்), தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேட்டன் சக்காரியா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ரணதுங்கா புகார்
இந்நிலையில், இலங்கையின் முன்னாள் கேப்டனும், அந்த அணிக்கு உலகக் கோப்பையை வென்றுக் கொடுத்தவருமான அர்ஜுனா ரணதுங்கா கூறுகையில், ""இரண்டாம் தர இந்திய அணியை இலங்கைக்கு அனுப்பி வைத்திருப்பது எங்கள் கிரிக்கெட்டை அவமதிப்பதாகும். வருமான தேவைகள் காரணமாக இந்திய 'ஏ' அணியுடன் விளையாட ஒப்புக்கொண்டதற்கு தற்போதைய இலங்கை நிர்வாகத்தை நான் குற்றம் சாட்டுகிறேன். இந்தியா தங்கள் சிறந்த அணியை இங்கிலாந்துக்கு அனுப்பிவிட்டு, பலவீனமான அணியை இங்கு அனுப்பியிருக்கிறது. இதற்கு எங்கள் வாரியத்தை தான் குறை கூற முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பலமான இந்திய அணி
இந்நிலையில், ரணதுங்கா குற்றச்சாட்டுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது அறிக்கை மூலம் பதில் அளித்துள்ளது. அதில், "இலங்கை வந்திருக்கும் 20 பேர் கொண்ட இந்திய அணியில், 14 வீரர்கள் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் அல்லது சில வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக விளையாடி வருபவர்கள். அப்படிப்பட்ட இந்திய அணி தான் இலங்கை வந்துள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறோம். தவிர, இலங்கை வந்துள்ள இந்திய அணி 2ம் தர இந்திய அணி கிடையாது" என்று பதிலடி கொடுத்திருக்கிறது.

அதலபாதாளத்தில் இலங்கை
தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை, அங்கு டி20 தொடரை இழந்தது. அதேபோல், இப்போது ஒருநாள் தொடரையும் இழந்துள்ளது. இந்த தோல்வியின் மூலம், ஒருநாள் போட்டிகளில் மிக மோசமான சாதனையை இலங்கை படைத்தது. அதாவது, ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 428 போட்டிகளில் தோற்றிருக்கிறது. உலகின் வேறு எந்த அணிகளையும் விட, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் தோற்ற அணி எனும் மோசமான சாதனையை இலங்கை படைத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











