
இலங்கை தொடர்
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வரும் ஜூலை 13ம் தேதி தொடங்குகிறது. இதற்காக ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி முதற்கட்ட இண்ட்ரா ஸ்குவாட் பயிற்சி ஆட்டத்தை முடித்துள்ளனர். இதில் இந்திய வீரர்கள் ருத்ராஜ் கெயிக்வாட், மணிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடினர். இந்திய அணி வலுவாக உள்ள நிலையில் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் நீடிக்கிறது.

காரணம் என்ன?
இலங்கை கிரிக்கெட் வாரியம், தங்களது வீரர்களுக்கு சிறப்பான செயல்பாட்டிற்கு ஏற்றவாறு ஊதியம் வழங்கப்படும் என்ற முறையை கொண்டு வந்தது. ஆனால் இதற்கு இலங்கை வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனை முடியும் வரை ஒவ்வொரு தொடருக்கும் தனித்தனியாக ஒப்பந்தம் போட முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஒப்பந்த பிரச்னை முடியும் வரை தனித்தனி தொடரில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட முடியாது என சில வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வீரர்கள் விலகல்
இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாடவிருந்த இலங்கை வீரர்கள் விஸ்வா ஃபெர்னாண்டோ, லசித் எம்புள்டேனியா, லஹிரு குமாரா, அசென் பண்டாரா, கசுன் ரஞ்சிதா ஆகிய 5 பேர் ஏற்கனவே ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்து கிளம்பிவிட்டனர். இதனையடுத்து இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருக்கும் வீரர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கால அவகாசம்
இந்நிலையில் இதுகுறித்து இலங்கை வாரியம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இங்கிலாந்து சென்றுள்ள வீரர்கள் இன்று இலங்கை திரும்புகின்றனர். அவர்கள் இந்திய அணியுடனான தொடரில் பங்கேற்பதற்கு வரும் ஜூன் 8ம் தேதிக்குள்ளாக கையெழுத்திட வேண்டும், இல்லையென்றால் தொடரில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த காலக்கெடு ஜூலை 3ம் தேதி வரை கொடுக்கப்பட்டிருந்த சூழலில் தற்போது மீண்டும் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications