கொழும்பு : இலங்கை கிரிக்கெட் அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக தசுன் ஷனகாவின் தலைமையில் முன்னேறி வந்தது.
2௦23 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க தயாராகி வரும் அந்த அணி இன்னும் இரு தினங்களில் இந்தியா வர உள்ளது.

இந்த நிலையில், தசுன் ஷனகா இலங்கை அணி கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. அவராகவே அந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா - இலங்கை ஆசிய கோப்பை இறுதிப் போட்டியின் மோசமான தோல்வி அவரை இந்த முடிவை எடுக்க வைத்திருக்கலாம் என கருதப்படுகிறது.
சரியான இலங்கை கேப்டன் : இலங்கை அணி கடந்த காலங்களில் மோசமாக ஆடி வந்த நிலையில் இரண்டு ஆண்டுகளாக தசுன் ஷனகாவின் கீழ் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்தது. ஷனகா தொலைநோக்குப் பார்வையோடு அணியை வழிநடத்தி வந்தார். அவர் ஒருநாள் போட்டி கேப்டனாக 37 போட்டிகளில் 23 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். 8 ஆண்டுகளுக்கு பின் தென்னாப்பிரிக்கா தொடர், 12 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியா தொடர் வெற்றிகளை பெற்று அசத்தி இருந்தார்.
தனிப்பட்ட செயல்பாடு : கேப்டனாக ஷனகா நன்றாக செயல்பட்டாலும், தனிப்பட அவரது பேட்டிங் மற்றும் பவுலிங் மோசமாக இருக்கிறது. கேப்டனாக அவர் ஆடிய போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 19 மட்டுமே. பவுலிங்கிலும் அவரது சராசரி 31இல் இருந்து 35க்கு சென்று விட்டது.
ஆசிய கோப்பை இறுதி : இந்த நிலையில், 2023 ஆசிய கோப்பை இறுதிப் போட்டி வரை இலங்கை அணி முன்னேறியது. அந்த அணியின் பலத்தை பொறுத்தவரை அதுவே பெரிய வெற்றி. ஆனால், இறுதிப் போட்டியில் கொஞ்சம் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் இந்திய அணியிடம் 50 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. முகமது சிராஜ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஒரே ஓவரில் 4 விக்கெட் இழந்து இருந்தது.
பெரும் தோல்வி : ஆசிய கோப்பை இறுதிப் போட்டி தோல்வியால் இலங்கை கிரிக்கெட்டுக்கு அவமானம் ஏற்பட்டு இருப்பதாக கருதி ஷனகா தன் கேப்டன் பதவியை விலக முடிவு எடுத்திருக்கலாம். அவரது தனிப்பட்ட செயல்பாடும் நன்றாக இல்லாததால் தானே தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக நினைத்திருக்கலாம்.
இலங்கை கிரிக்கெட் சமாதானம் : இந்த தகவல் சில மணி நேரம் வரை பரவியது. ஆனால், அதற்குள் இலங்கை கிரிக்கெட்டில் இருந்து அதிகாரப்பூர்வமற்ற தகவல் ஒன்று வெளியானது. அதன்படி 2023 உலகக்கோப்பை தொடர் வரை தசுன் ஷனகாவே கேப்டனாக இருக்க முடிவு எடுத்திருப்பதாக கூறி இருக்கிறது.