ஹோட்டல் கழிவறையில் பெண்களை ரகசிய வீடியோ எடுத்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கைது.. என்ன நடந்தது?
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் சம்பவங்கள் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. ஒருபுறம் அந்நாட்டு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ள நிலையில், மறுபுறம் ஹோட்டல் கழிவறையில் பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்ததாக 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் இளம் வீரர்கள் இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் நாட்டுக்காக விளையாட வேண்டிய வீரர்கள் இப்படி ஒரு மோசமான குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பின் நாரஹேன்பிட்டா பகுதியில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் தங்கியிருந்தனர். அதே ஹோட்டலில் தங்கியிருந்த பெண்கள் சிலர், தாங்கள் கழிவறையை பயன்படுத்தும் போது அடையாளம் தெரியாத நபர்களால் மொபைல் போன் மூலம் ரகசியமாக வீடியோ எடுக்கப்பட்டதாக போலீசாரிடம் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், இலங்கை அணியின் இளம் வீரர்கள் இருவர் இந்த மோசமான செயலில் ஈடுபட்டது அம்பலமானது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், உடனடியாக அந்த இரண்டு வீரர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். முதல் கட்ட விசாரணையின் முடிவில் அவர்கள் தலா 500000 இலங்கை ரூபாய் மதிப்பிலான சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் மே 25ம் தேதி நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதற்கிடையே, ரகசியமாக எடுக்கப்பட்ட அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்கள் அல்லது இணையதளங்களில் எங்கேனும் பகிரப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், சம்பந்தப்பட்ட வீரர்கள் மீது இலங்கை கிரிக்கெட் வாரியம் இதுவரை எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்த முகம் சுளிக்க வைக்கும் சம்பவம் ஒருபுறம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் மிகப்பெரிய நிர்வாக மாற்றங்கள் அரங்கேறியுள்ளன. கடந்த ஏப்ரல் 29 அன்று, வாரியத் தலைவர் ஷம்மி சில்வா உட்பட ஒட்டுமொத்த நிர்வாகிகளும் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் கூண்டோடு தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் வாரியத்தை மறுசீரமைக்க முன்னாள் எம்.பி எரான் விக்ரமரத்னே தலைமையில் 9 பேர் கொண்ட புதிய குழுவை இலங்கை அரசு அமைத்துள்ளது. இந்த முக்கிய குழுவில் குமார் சங்ககாரா, ரோஷன் மகாநமா, சிதாத் வெட்டிமுனி உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், சட்ட மற்றும் கார்ப்பரேட் நிபுணர்களும் இடம்பெற்றுள்ளனர். இளம் வீரர்களின் இந்த ஒழுங்கீனமான செயலும், கிரிக்கெட் வாரியத்தின் அதிரடி மாற்றங்களும் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications