கொழும்பு: 2026-ல் இலங்கை சுற்றுப்பயணத்தின்போது 'தித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட அந்நாட்டின் நிவாரணப் பணிகளுக்கு உதவும் வகையில் கூடுதல் டி20 போட்டிகளை நடத்த பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷம்மி சில்வா, ஜனவரி 2 அன்று இதை உறுதிப்படுத்தினார்.
ஆகஸ்ட் 2026 இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணம், 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் டெஸ்ட் போட்டிகளை மட்டுமே உள்ளடக்கியது. முன்னதாக, டிசம்பர் 2025-ல் இரண்டு டி20 போட்டிகள் மூலம் நிதி திரட்ட இந்தியா முன்வந்தபோதும், அது நடைபெறாமல் போனது.

“தொலைக்காட்சி உரிமத்தை ஏற்பாடு செய்ய அவகாசம் கிடைக்கவில்லை,” இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் சில்வா தெரிவித்தார். இந்நடவடிக்கை இந்தியா இலங்கைக்கு அளிக்கும் நட்புக்கரத்தின் அடையாளம் எனப் பாராட்டிய அவர், கூடுதல் போட்டிகள் மூலம் நிவாரண நிதியை ஈட்ட முடியும் என்று கூறினார்.
நவம்பர் 2025 இறுதியில் தாக்கிய 'தித்வா’ புயல், 2004 சுனாமிக்குப் பிறகு இலங்கையின் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்று. வரலாறு காணாத மழைப்பொழிவால் பெரும் சேதங்கள் ஏற்பட்டன. 600க்கும் அதிகமானோர் உயிரிழந்து லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
வீடுகள், உள்கட்டமைப்பு, வாழ்வாதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதற்கிடையில், பாகிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் டி20 தொடர் மூலம் கிடைக்கும் வருவாயையும் வெள்ள நிவாரணத்திற்காக எஸ்எல்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், எஸ்எல்சி நிதி இழப்புகளுக்கு உதவ, பிசிசிஐ மூன்று டி20 தொடருடன் மூன்று ஒருநாள் போட்டிகளையும் நடத்தியது. இதன் மூலம் கிடைத்த வருவாய், அப்போது இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.