நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி
கொழும்பு: நியூசிலாந்தை அபாரமாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது இலங்கை. இலங்கை அணி தொடர்ந்து 2வது முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் பெரிய அளவில் தவறுகள் செய்யாமல் உறுதியாக நடைபோட்டு வரும் அணிகளில் இலங்கையும் ஒன்று. 2007 உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கும் இலங்கை முன்னேறியிருந்தது. அப்போட்டியில், ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில் 2வது முறையாக இந்த முறையும் இறுதிப் போட்டிக்குள் அது ஸ்டைலாக நுழைந்துள்ளது.
நேற்று நடந்த முதல் அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 217 ரன்களை மட்டுமேஎடுத்தது.
ஸ்காட் ஸ்டைரிஸ் 57 ரன்கள் எடுத்தார். ராஸ் டெய்லர் 36, மார்ட்டின் குப்தில் 39, வில்லியம்சன் 22 ரன்கள் எடுத்தனர்.
இலங்கைத் தரப்பில் அஜந்தா மெண்டிஸ் 3 விக்கெட்களையும், முத்தையா முரளிதரன் 2 விக்கெட்களையும் சாய்த்தனர். மலிங்காவுக்கும் 3 விக்கெட்கள் கிடைத்தன.
பின்னர் ஆடிய இலங்கை அணி 47.5 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டும் இழந்து 220 ரன்களைக் குவித்து வெற்றி பெற்றது.
தில்ஷன் 73 ரன்களைக் குவித்தார். சங்கக்காரா 54, தரங்கா 30 எடுத்தனர். சமரவீரா ஆட்டமிழக்காமல் 23, மாத்யூஸ் ஆட்டமிழக்காமல் 14 ரன்களை எடுத்தனர்.
ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்த இலங்கை அதன் பின்னர் 25 ரன்களைச் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்தது. இதனால் தோல்வியின் எல்லைக்குள் அது வந்து விட்டது. இருப்பினும் சமரவீராவும், மாத்யூஸும் விக்கெட் வீழ்ச்சியை நிறுத்தி வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.
முரளிதரனுக்கு பிரியாவிடை
நேற்றைய போட்டிதான் இலங்கையில் முத்தையா முரளிதரன் விளையாடிய கடைசி போட்டியாகும். இதனால் அவரை ஆட்டம் முடிந்ததும் இலங்கை வீரர்கள் தோளில் தூக்கிக் கொண்டு உற்சாகமாக வலம் வந்து பிரியாவிடை கொடுத்தனர்.
முரளிதரன் குறித்து சங்கக்காரா கூறுகையில், இலங்கையில் முரளிக்கு இதுதான் கடைசிப் போட்டி. எனவே இதை சிறந்த வெற்றிப் பரிசாக கொடுக்க நினைத்தோம். அதேபோல செய்துள்ளோம். முரளிதரன் இலங்கையின் அடையாளம். பீல்டிலும் சரி, வெளியிலும் சரி மிகச் சிறந்த மனிதர் என்று புகழாரம் சூட்டினார்.
நேற்றைய தனது கடைசிப் போட்டியில் இலங்கை ரசிகர்களைக் குஷிப்படுத்த் தவறவில்லை முரளிதரன். 10 ஓவர்கள் வீசிய முரளிதரன் 2 விக்கெட்களைச் சாய்த்தார், 42 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்தார். ஒரு மெய்டனும் போட்டார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications