கொழும்பு: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் தொடர்ச்சியாக மூன்று தோல்விகளைச் சந்தித்து இலங்கை அணி வெளியேறியதை அடுத்து, அந்நாட்டு ரசிகர்கள் கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராகக் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டி20 உலகக் கோப்பையை நடத்தும் நாடுகளில் ஒன்றான இலங்கை அணி, சொந்த மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி உலகக்கோப்பை லீக் சுற்றில் ஆஸ்திரேலியா, ஓமன் மற்றும் அயர்லாந்து அணிகளை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு அந்த அணி முன்னேறியது. ஆனால் சூப்பர் 8 சுற்றில் தான் எதிர்கொண்ட மூன்று போட்டிகளிலும் அடுத்தடுத்து படுதோல்வியைச் சந்தித்து, பாகிஸ்தான் அணியுடன் சேர்ந்து தொடரை விட்டு வெளியேறியது.

இதனால் ஆத்திரமடைந்த இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள், சனிக்கிழமை கொழும்பில் உள்ள இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைமையகத்திற்கு வெளியே திரண்டு போராட்டம் நடத்தினர். பௌத்த துறவி ஒருவர் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில், இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்கள் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கிரிக்கெட் நிர்வாகத்தை முறையாக நடத்தத் தவறியதால்தான் இலங்கை அணி தற்போது இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய ரசிகர்கள், "கிரிக்கெட் மாபியாக்களே வீட்டுக்கு போங்கள்" என்று பதாகைகளை ஏந்தி ஆவேசமாகக் கோஷமிட்டனர். இலங்கை கிரிக்கெட்டின் இழந்த பெருமையை மீட்டெடுக்க, நிர்வாகக் கட்டமைப்பில் முழுமையான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
ரசிகர்களின் கோபம் ஒருபுறம் இருக்க, இலங்கை அணியின் மோசமான தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். சனிக்கிழமை பாகிஸ்தான் அணிக்கு எதிரான தோல்விக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "என்னுடைய ஒப்பந்தம் ஜூன் மாதம் முடிவடைகிறது. ஆனால் அதற்கு முன்னதாகவே நான் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் பேசி எனது ராஜினாமாவை வழங்குவேன்" என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும். இந்த மோசமான செயல்பாட்டிற்காக ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அணியின் முக்கிய வீரர்களான வனிந்து ஹசரங்கா, மதீஷா பதிரானா மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோருக்கு ஏற்பட்ட காயம் அணியைப் பெரிதும் பாதித்தது. அவர்களுக்குப் பதிலாக களமிறங்கிய வீரர்கள் தங்களது திறமையை முழுமையாக வெளிப்படுத்தவில்லை.
ஹசரங்கா எங்கள் அணியின் மிகச்சிறந்த வீரர், அவருக்கு மாற்று வீரரை அவ்வளவு எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியாது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே எங்கள் அணியின் செயல்பாடு சீராக இல்லாததே தோல்விக்கு முக்கியக் காரணமாகும்" என்று வேதனையுடன் கூறினார்.

சொந்த மண்ணில் உலகக் கோப்பையை நடத்தும் இலங்கை அணி, சூப்பர் 8 சுற்றுடன் எந்தவொரு வெற்றியும் இன்றி வெளியேறியிருப்பது அந்த நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.