கொழும்பு: மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், இலங்கை வெற்றிபெற 386 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி. இதையடுத்து பேட் செய்த இலங்கை அணி நாலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்து திணறிக்கொண்டுள்ளது.
இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிவரும் இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்டில் தோல்வியையும் இரண்டாவது டெஸ்டில் வெற்றியும் அடைந்தது. இத்தொடரின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்தியா தனது முதல் இன்னிங்சில் 312 ரன்களும், இலங்கை 201 ரன்களும் எடுத்தன. நேற்று தனது 2வது இன்னிங்சை ஆரம்பித்த இந்தியா இன்று தேனீர் இடைவேளை நேரத்தில் 274 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. எனவே இலங்கைக்கு 386 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.
முன்னதாக இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்தார். ரோகித் ஷர்மா 50, ஸ்டூவர்ட் பின்னி 49, அமித் மிஸ்ரா 39, நமன் ஓஜா 35 ரன்கள் உதவியோடு இந்தியா இந்த ஸ்கோரை எட்டியது. இலங்கை தனது 2வது இன்னிங்சில் நாலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. உபுல் தரங்கா, கருணரத்னே ஆகியோர் டக்-அவுட்டான நிலையில் சண்டிமால் 18 ரன்களில் வெளியேறினார். கேப்டன் மேத்யூஸ் மற்றும் குஷால் சில்வா ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இன்னும் ஒருநாள் எஞ்சியுள்ள நிலையில் இலங்கையால் இந்த ஸ்கோரை எட்டுவது மிக கடினம். எனவே மழை குறுக்கிடாமல் இருந்தால் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை இலங்கையில் ருசிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.