3வது கிரிக்கெட் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 135 ரன்களில் இலங்கை சுருண்டது!
பல்லகெலே: 3 போட்டிகள் கொண்ட இலங்கை இந்தியா டெஸ்ட் தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டி பல்லகெலேவில் இன்று நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் இலங்கை 135 ரன்களில் சுருண்டு ஃபாலோ ஆன் ஆனது.
இந்த டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார். களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 122.3 ஓவர்களில் 487 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஷிகர் தவன் 119, ஹார்திக் பாண்டியா 108 ரன்கள் விளாசினர்.

இந்நிலையில், தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 135 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் தினேஷ் சாண்டிமால் 48 ரன்கள் சேர்த்தார். சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியின் குல்தீப் யாதவ் 4, அஸ்வின் மற்றும் முகமது சமி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்காரணமாக இந்திய கேப்டன் விராட் கோஹ்லி இலங்கை அணிக்கு ஃபாலோ ஆன் வழங்கினார். எனவே, 352 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. இப்போட்டியில் 3 நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.
ஏற்கனவே நடந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுமே 4-ஆவது நாளில் நிறைவுபெற்றது. தற்போது 3-ஆவது டெஸ்ட் போட்டி அதை விடவும் குறுகிய காலத்தில் நிறைவடைய வாய்ப்புள்ளதால் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் நிலவுகிறது.


Click it and Unblock the Notifications