கொழும்பு: கடந்த இரண்டு மாதங்களில் இலங்கை அணியின் கிரிக்கெட் சற்று உயர்ந்துள்ளது என்று கூறலாம். கொஞ்சம் கான்ஃபிடண்ட் லெவலுக்கு அதிகரித்திருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளாக, கிரிக்கெட் உலகில் பெரியளவில் வீழ்ச்சியடைந்த மிகப்பெரிய அணி என்றால் அது இலங்கை தான். "நாங்க மட்டும் என்ன சும்மாவா" என்று பாகிஸ்தான் மல்லுக்கட்ட வந்தாலும், இலங்கை தான் முதலிடத்தில் உள்ளது.

ஆனால், இந்திய தொடருக்கு பிறகு அந்த அணி சற்று பூஸ்ட் அப் ஆகியிருக்கிறது என்பது தெரிகிறது. அதற்கு சாம்பிளாக, தென்னாப்பிரிக்க அணியை ஒருநாள் தொடரில் வீழ்த்தி இருக்கிறது இலங்கை.
ஆம்! நம்ப சற்று கடினமாகத் தான் இருக்கும். உண்மையில், தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி தொடரை வென்றுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்கா விளையாடி வருகிறது. இதில், முதல் ஒருநாள் போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெல்ல, 2வது ஒருநாள் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் (DLS) விதிப்படி தென்னாப்பிரிக்கா வென்றது. இந்நிலையில், தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று (செப்.7) கொழும்புவில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் மட்டும் எடுத்தது.
பிறகு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா, ஜஸ்ட் 125 ரன்களுக்கு ஆல் அவுட்டாக 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இலங்கை அணி. அப்படியே 2-1 என்று தொடரையும் வென்றது. அதுவும் 18 மாதங்கள் கழித்து. ஆம்! கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இலங்கை அணி எந்த ஒருநாள் தொடரையும் வென்றதில்லை. இது தான் இவர்களது முதல் ஒருநாள் தொடர் வெற்றி. சமீபத்தில் நடைபெற்ற இந்திய தொடரில் கூட அவர்கள் ஒருநாள் தொடரை இழந்திருந்தார். அதற்கு முன்பு, இங்கிலாந்தில் நடந்த தொடரில், வெளியே சொல்ல முடியாத அளவுக்கு அடி வாங்கி வந்தது இலங்கை, வங்கதேசம் சென்று விளையாடிய போதும், தொடரை இழந்தது.
இந்நிலையில், இப்படியொரு வெற்றி இலங்கைக்கு மிக அவசியமாகிறது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய 'ஏ' அணி, சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியது. இதில், ஒருநாள் தொடரை 2-1 என்று இழந்த இலங்கை, டி20 தொடரை 2-1 என்று கைப்பற்றியது. அதில் வனிந்து ஹஸரங்காவின் ஆட்டம் அட்டகாசமாக இருந்தது. இந்திய அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களையும் அச்சுறுத்திய பவுலராக வலம் வந்தார். இதன் மூலம், ஐபிஎல் தொடரில், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாடும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. இம்மாதம் அமீரகத்தில் நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில், அவர் ஆர்சிபி அணியில் விளையாடவிருக்கிறார்.
இப்போது, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் அவர் சிறப்பாக விளையாடி இருக்கிறார். இந்திய தொடரில், டி20 கோப்பையை வென்ற பிறகு, இலங்கை அணியின் ஒட்டுமொத்த வீரர்களும் கேப்டன் ஷிகர் தவானிடம் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு தவான் பல ஆலோசனைகளை வழங்கினார். அணியின் மேம்பாடு குறித்தும், வீரர்களிடையே கான்ஃபிடண்ட் லெவலை இம்ப்ரூவ் செய்வது குறித்தும், முக்கியமான சில டிப்ஸ்களையும் வழங்கினார். ஸோ, ஒட்டுமோத்தமாகவே இந்திய தொடருக்கு பிறகு இலங்கை அணியின் ஆட்டமே மாறியிருக்கிறது. இதே வேகத்தில் விளையாடினால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரையும் இலங்கை வென்றுவிடும் என்பதில் சந்தேகமில்லை.