ராஞ்சி: இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்துள்ளது. இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று இரு நாடுகளுக்கு நடுவேயான தொடர் ஒன்றில் ஐந்துக்கு பூஜ்யம் என்ற கணக்கில் வெள்ளையடிப்புக்கு உள்ளாகாத நாடு என்ற இலங்கையின் பெருமையை இந்தியா தகர்க்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. முதல் நான்கு போட்டிகளிலும் இந்தியா அபாரமாக வெற்றி பெற்ற நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ராஞ்சியில் நடைபெறுகிறது. டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிரோசான் டிக்வெல்லா 4 ரன்னிலும், தில்ஷான் 35 ரன்களிலும் ஆட்டமிழந்து வழக்கம்போல இலங்கை அணிக்கு அதிர்ச்சியளித்தனர். இதன்பிறகு களமிறங்கிய தினேஷ் சண்டிமால் 5 ரன்கள், ஜெயவர்த்தனே 32 ரன்கள் எடுத்து அவுட் ஆன நிலையில், கேப்டன் மேத்யூஸ் மற்றும் திரிமன்னே கடும் போராட்டம் நடத்தி சரிவில் இருந்து அணியை மீட்டனர்.
திரிமன்னே 52 ரன்கள் எடுத்த நிலையில் திசாரே பெரேரா 6 ரன்களும், பிரசன்னா ரன் ஏதும் எடுக்காமலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். கடைசிவரை ஆட்டமிழக்காத மேத்யூஸ் 139 ரன்கள் குவித்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய பந்து வீச்சாளர்களில் குல்கர்ணி 3 விக்கெட்டுகளையும், அக்ஷர் பட்டேல் மற்றும் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பின்னி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இலங்கை அணி இருதரப்பு ஒருநாள் தொடர் ஒன்றில் 5க்கு பூஜ்யம் என்ற கணக்கில் இதுவரை தோற்றதில்லை. இந்த போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றால் அந்த மோசமான சாதனையை இலங்கைக்கு பரிசளிக்க முடியும். இந்தியாவும் ஐசிசி ரேங்கிங்கில் நம்பர் 1 இடத்தை பிடிக்க முடியும்.