2011 உலகக்கோப்பை பைனலில் நடந்த மேட்ச் பிக்ஸிங்.. முன்னாள் இலங்கை அமைச்சர் அதிர்ச்சித் தகவல்!
கொழும்பு : முன்னாள் இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, இலங்கை அணி, இந்தியாவிடம் 2011 உலகக்கோப்பை வெற்றியை விற்று விட்டதாக கூறி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார்.
Recommended Video
இந்திய அணி 2011 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில், இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்று தன் இரண்டாவது உலகக்கோப்பையை வென்று இருந்தது.

பரபரப்பு குற்றச்சாட்டு
அந்த வெற்றியை இலங்கை விற்று விட்டதாக இப்போது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே. இது இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய ரசிகர்களும் கோபம் அடைந்துள்ளனர்.

இந்தியா பெற்ற வெற்றி
2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 275 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணியில் கௌதம் கம்பீர் 97, தோனி 91* ரன்கள் குவித்தனர். இந்தியா வெற்றிகரமாக சேஸிங் செய்து உலகக்கோப்பை வென்றது.

சர்ச்சை
அது இந்திய அணியின் இரண்டாவது உலகக்கோப்பை வெற்றி ஆகும். 1983க்குப் பின் இந்திய அணி அப்போது தான் உலகக்கோப்பை வென்று இருந்தது. அந்த முக்கியமான வெற்றி, இலங்கை விற்றது என அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சரே இப்போது கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நாம் விற்று விட்டோம்
மஹிந்தானந்த அலுத்கமகே இலங்கை தொலைக்காட்சியான சிரஸாவிற்கு அளித்த பேட்டியில், "இன்று நான் சொல்கிறேன். 2011 உலகக்கோப்பையை நாம் விற்று விட்டோம். நான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போதும் கூட இதை கூறினேன்" என்றார்.

வெற்றி பெற வேண்டிய போட்டி
மேலும், "ஒரு நாடாக இதை நான் அறிவிக்க விரும்பவில்லை. அது 2011ஆ அல்லது 2012ஆ என எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால், அது நாம் வெற்றி பெற வேண்டிய போட்டி. அந்த போட்டி ஃபிக்ஸ் செய்யப்பட்டது என நான் பொறுப்புடன் கூறுகிறேன்" என்றார் மஹிந்தானந்த அலுத்கமகே.

சிலர் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள்
மேலும், மஹிந்தானந்த அலுத்கமகே வீரர்கள் போட்டியின் முடிவை மேட்ச் பிக்ஸிங் செய்யவில்லை. ஆனால், சிலர் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என சூசகமாக கூறி உள்ளார். இதை அவர் ஏன் இப்போது பேசுகிறார் என்பதிலும் விவாதம் எழுந்துள்ளது.

மகிளா ஜெயவர்தனே கருத்து
2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியில் சதம் அடித்த மகிளா ஜெயவர்தனே இந்த குற்றச்சாட்டை புறந்தள்ளும் வகையில் ட்விட்டரில் கருத்து கூறி உள்ளார். அவர் இது தேர்தலுக்காக சொல்லப்படும் புகார் என கூறி உள்ளார்.

ஆதாரம் இருக்கிறதா?
மகிளா ஜெயவர்தனே தன் பதிவில், "விரைவில் தேர்தல் வருகிறதா? சர்க்கஸ் ஆரம்பித்து விட்டது என நினைக்கிறேன்.. பெயர்கள் மற்றும் ஆதாரம் இருக்கிறதா?" என கேள்வி எழுப்பி உள்ளார். வீரர்கள் இதில் பிக்ஸிங் செய்யவில்லை என முன்னாள் அமைச்சர் கூறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்புறம் எப்படி போட்டி முடிவை மாற்ற முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.

இலங்கையில் தேர்தல்
ஆகஸ்ட் 5ஆம் தேதி இலங்கையில் தேர்தல் வருகிறது. அதற்காகவே இவர் இப்போது இந்த விவகாரத்தை எழுப்பி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த புகாரை அடுத்து, தேர்தலுக்காக தங்கள் நாட்டின் மானத்தை தாங்களே கப்பல் ஏற்றும் வேலையை செய்கிறார்களா? என்ற கேள்வி எழுகிறது.

இந்திய ரசிகர்கள் கோபம்
இந்திய அணி போராடி, நேர்மையாக வெற்றி பெறவில்லை என்பது போலவும் இந்த குற்றச்சாட்டில் ஒரு பார்வை உள்ளது. அதனால், இந்திய ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர். சிலர் 1996இல் இலங்கை வென்ற உலகக்கோப்பையும் பிக்ஸிங் செய்யப்பட்டதா? என கோபமாக கேள்வி எழுப்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications