
2 பிரச்னைகள்
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் ஜூலை 13ம் தேதி தொடங்குகிறது. ஆனால் இன்னும் இதற்கான இலங்கை அணியின் வீரர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை. இதற்கு காரணம் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஊதிய ஒப்பந்தம் மற்றும் கொரோனா பிரச்னையே ஆகும். இந்நிலையில் தற்போது ஊதிய பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

காரணம் என்ன?
இலங்கை கிரிக்கெட் வாரியம் புதிய ஊதிய முறையை கொண்டு வந்தது. இதற்கு வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், தற்காலிகமாக ஒவ்வொரு தொடருக்கும் தனித்தனியாக ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருகிறது. ஆனால் ஒப்பந்த முறையில் மாற்றம் கொண்டு வராமல் வேறு தொடருக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட மாட்டோம் என சில வீரர்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால் இந்திய தொடரின் நிலைமை குறித்து சந்தேகம் நிலவியது. ஆனால் தற்போது சந்தேகம் முடிவுக்கு வந்துள்ளது.

30 வீரர்கள்
இந்திய தொடருக்காக இலங்கை அணி தேர்வு செய்த 30 வீரர்களில் 29 பேர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். நட்சத்திர வீரர் ஏஞ்சிலோ மேத்யூவ்ஸ் மட்டும் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து வெளியேறிவிட்டார். இதனால் ஒரு பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. எனினும் எந்தெந்த வீரர்கள் கையெழுத்திட்டனர் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

கொரோனா பிரச்னை
எனினும் கொரோனா பிரச்னை நீடித்து வருகிறது. இங்கிலாந்து தொடரை முடித்துவிட்டு இலங்கை திரும்பிய வீரர்களுக்கு பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் யாருக்கேனும் கொரோனா உறுதி செய்யப்பட்டால் ஒட்டுமொத்த தொடரும் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications