காலே: காலே முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 128 ரன்கள் எடுத்துள்ளது. ஷிகர் தவான் நிதானமாக ஆடி அரை சதம் எடுத்தார். கோஹ்லி 45 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
முன்னதாக அஸ்வினின் அதிரடி சுழற்பந்து வீச்சில் சிக்கிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸை 183 ரன்களுக்குப் பறி கொடுத்தது. 6 விக்கெட்களைச் சாய்த்த அஸ்வின் இலங்கையின் முன்னணி வீரர்களை சுளுக்கெடுத்து விட்டார். குறிப்பாக அபாயகரமான சங்கக்கரா மற்றும் திரிமன்னே ஆகியோரை அவர் வீழ்த்தியது இந்திய அணிக்கு பெரும் நிம்மதியாக மாறியது.

இந்தியா இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஏஞ்செலா மாத்யூஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இதையடுத்து இலங்கை பேட் செய்தது. ஆரம்பத்தில் சற்று அதிரடியாக ஆட முயற்சித்தது இலங்கை. இதனால் முதல் 3 விக்கெட்களை வேகமாக அது இழந்தது.
குறிப்பாக இஷாந்த் சர்மாவின் பந்து வீச்சில் இலங்கை வீரர்கள் நன்றாக தடுமாறினார். அபாரமாக பந்து வீசிய இஷாந்த் சர்மா 7 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். மறுபக்கம் வருண் ஆரோன் ரன்களை வாரி வழங்கி ஒரு விக்கெட்டைச் சாய்த்தார்.
அதன் பின்னர் தாக்கியது அஸ்வின் சூறாவளி. எப்படியாவது தேறி விடலாம் என நினைத்து இலங்கையின் நினைப்பில் மண்ணைப் போட்டு விட்டார் அஸ்வின்.
அதிரடியாக பந்து வீசிய அவர் அடுத்தடுத்து விக்கெட்களைச் சாய்த்து இலங்கையை தடுமாற வைத்து விட்டார். திரிமன்னே, சங்கக்கரா, கேப்டன் மாத்யூஸ், ஜெகன் முபாரக், தம்மிக பிரசாத் ஆகியோர் அஸ்வின் பந்தில் வீழ்ந்தனர்.
இதில் சங்கக்கரா மிகவும் அபாயகரமானவர். அதேபோல தட்டுத்தடுமாறி அடித்து ஆட ஆரம்பித்த கேப்டன் மாத்யூஸும் 64 ரன்கள் எடுத்த நிலையில் வீழ்ந்தார்.
இறுதியில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸை 183 ரன்களுக்கு இழந்தது. இதைத் தொடர்ந்து இந்தியா தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.
ஷிகர் தவானும், ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இதில் ராகுல் 7 ரன்களில் வீழ்ந்தார். அடுத்து வந்த ரோஹித் சர்மா 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த தவானும், கோஹ்லியும் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். பொறுப்புடன் ஆடிய தவான் அரை சதம் போட்டார். கோஹ்லியும் அரை சதத்தை நெருங்கியுள்ளார். இந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ஆட்ட நேர இறுதியில் தவான் 53 ரன்களும், கோஹ்லி 45 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலங்கைத் தரப்பில் தம்மிக பிரசாத், மாத்யூஸும் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.