புனே: இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று புனேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சண்டிமால் பீல்டிங் தேர்வு செய்தார்.
இலங்கையின் அசத்தலான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையாக பெவிலியன் திரும்பினர். இந்திய அணியில் அதிகபட்சமாக அஷ்வின் 31 ரன்கள், சுரேஷ் ரெய்னா 21 ரன்கள், யுவராஜ் சிங் 10 ரன்கள் எடுத்தனர். இவர்களை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுடன் அவுட் ஆகினர். இதனால், இந்திய அணி 18.5 ஓவர்களில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இதையடுத்து 102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி தொடக்கத்தில் சற்று தடுமாறியது. இருப்பினும் கேப்டன் சண்டிமால் மற்றும் கபுகேதரா ஆகியோர் நிதானமாக ஓரளவு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சண்டிமால் 35 ரன்கள் எடுத்த நிலையில் ரெய்னா பந்தில் ஆட்டமிழந்தார். கபுகேதராவும் 25 ரன்களில் அஷ்வினால் வெளியேற்றப்பட்டார். பந்து வீச்சுக்கு மைதானம் சாதகமாக காணப்பட்டதால், இலங்கை பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க தடுமாறினர். இருப்பினும் இலங்கை அணி 18 வது ஓவரில் 105 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இலங்கையின் அறிமுக பந்து வீச்சாளர்கள் ரஜிதா, சனாகா ஆகியோர் அபாரமாக பந்து வீசி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடிய இந்திய அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் 3 தொடர்கள் கொண்ட போட்டியில் இலங்கை 3-1 என முன்னிலை வகிக்கிறது.