ஹைதராபாத் : பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இலங்கை அணி பெரிய அளவில் ரன் குவித்தும், தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டிக்கு பின் பேசிய இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா, தங்கள் அணி செய்த தவறுகளை ஒப்புக் கொண்டார். இந்தப் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 344 ரன்கள் குவித்தும், தோல்வி அடைந்தது.

பாகிஸ்தான் அணி 48.2 ஓவரில் இந்த இமாலய வெற்றி இலக்கை எட்டியது. இரண்டு அணிகளிலும் தலா இரண்டு வீரர்கள் சதம் அடித்தனர். ஆனால், எங்கே வித்தியாசம் இருந்தது என்றால், இலங்கை அணியின் கடைசி சில ஓவர் பேட்டிங் மற்றும் அந்த அணி வீசிய வைடு பந்துகள் தான்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் நிசங்கா 51, குசால் மென்டிஸ் 77 பந்துகளில் 122 ரன்கள், சமரவிக்ரமா 89 பந்தில் 1௦8 ரன்கள் குவித்தனர். சரியாக 40 ஓவர்களில் அந்த அணி 4 விக்கெட் இழந்து 283 ரன்கள் எடுத்து இருந்தது. சமரவிக்ரமா அப்போது களத்தில் தான் இருந்தார்.
கடைசி 10 ஓவர்களில் அந்த அணி 80 முதல் 100 ரன்கள் வரை குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இலங்கை அணி 61 ரன்கள் மட்டுமே கூடுதலாக எடுத்து, 5 விக்கெட்களை இழந்தது. 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணிக்கு இலங்கை அணியின் பந்துவீச்சு பெரிய அளவில் அச்சுறுத்தலாக இல்லை. பாபர் அசாம் 10, இமாம் உல் ஹக் 12 ரன்களில் வெளியேறியது மட்டுமே சிறிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், அப்துல்லா ஷபிக் மற்றும் முகமது ரிஸ்வான் சதம் அடித்து போட்டியை பாகிஸ்தான் அணி வசம் மாற்றினர்.
அடுத்து இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் சகட்டுமேனிக்கு வைடு வீசினார்கள். மொத்தம் 25 வைடுகள் வீசி பாகிஸ்தான் அணியின் ஒரு பேட்ஸ்மேன் எடுத்த ஸ்கோர் போல 25 வைடு, 1 நோ பால் என 26 ரன்களை வாரிக் கொடுத்து இருந்தனர் இலங்கை பவுலர்கள்.
இது குறித்து போட்டி முடிந்த உடன் பேசிய இலங்கை கேப்டன் ஷனகா, "நாங்கள் இதை விட 20- 25 ரன்கள் கூடுதலாக அடித்து இருக்க வேண்டும். பந்துவீச்சாளர்கள் நிறைய ஸ்லோ பால்களை வீசினார்கள். ஆனால், நாங்கள் அதிக வைடுகளை வீசி விட்டோம். மிக மிக அதிகமாக ரன்களை கொடுத்து விட்டோம். பீல்டிங்கிலும் நிறைய தவறுகள் செய்தோம்" என இலங்கை அணியின் தவறுகளை அவரே பட்டியல் போட்டு ஒப்புக் கொண்டார்.