துபாய்: மேட்ச் ஃபிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட முன்னாள் இலங்கை உள்ளூர் கிரிக்கெட் வீரர் சாலிய சமனுக்கு, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க ஐந்து ஆண்டுகள் தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு அபுதாபியில் நடைபெற்ற டி10 கிரிக்கெட் லீக் தொடரில் போட்டிகளின் முடிவை மாற்றியமைக்கும் சூதாட்ட முயற்சியில் ஈடுபட்டதாக சாலிய சமன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஐசிசியின் ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது. அமீரக கிரிக்கெட் வாரியத்தின் (ECB) ஊழல் தடுப்பு விதிகளை சாலிய சமன் மீறியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

நீண்ட விசாரணைக்குப் பிறகு, சாலிய சமன் மீதான மூன்று முக்கிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன:
1 - அபுதாபி டி10 லீக் 2021 தொடரின் போட்டிகளின் முடிவை மாற்றியமைக்கும் சூதாட்ட முயற்சிக்கு உடந்தையாக இருந்தது.
2 - சூதாட்டத்தில் ஈடுபடுவதற்காக மற்றொரு வீரருக்குப் பரிசு அல்லது வெகுமதி வழங்கியது.
3 - ஊழல் தடுப்பு விதிகளை மீறுமாறு பிற வீரர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தூண்டியது அல்லது ஊக்குவித்தது.
இந்த மூன்று குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சாலிய சமன் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையானது, அவர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்ட செப்டம்பர் 13, 2023 முதல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
2021 அபுதாபி டி10 லீக் தொடரில் புனே டெவில்ஸ் அணியுடன் தொடர்புடைய எட்டு பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர்களில் ஒருவரான சமனுக்கு தற்போது இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வங்கதேச ஆல்-ரவுண்டர் நசீர் ஹொசைனுக்கும் இதேபோன்ற குற்றச்சாட்டுகளுக்காக இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 39 வயதான சாலிய சமன், இலங்கைக்காக 101 முதல் தரப் போட்டிகளிலும், 77 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.