இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள், இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் தீவிர உயிர் பயத்தில் உறைந்துள்ளனர். அணியில் உள்ள குறைந்தது 8 வீரர்கள், உடனடியாக நாடு திரும்ப விருப்பம் தெரிவித்த நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. போட்டிகள் ராவல்பிண்டி நகரில் நடைபெற்று வரும் நிலையில், இஸ்லாமாபாத்தில் புதன்கிழமை நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

போட்டி நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால், இலங்கை வீரர்கள் தீவிர பாதுகாப்பு அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக, ராவல்பிண்டியில் நடைபெறவிருந்த இரண்டாவது ஒருநாள் போட்டிக்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, அணியில் உள்ள முக்கிய வீரர்கள் பலர் நாடு திரும்ப வேண்டும் என்று அணி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
வீரர்களின் இந்தக் கோரிக்கை குறித்து அறிந்த இலங்கை கிரிக்கெட் வாரியம், உடனடியாக ஒரு அவசர அறிக்கையை வெளியிட்டது. அதில், வீரர்களின் பாதுகாப்பு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) மற்றும் அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உறுதியளித்தது.
ஆனால், அந்த அறிக்கையின் அடுத்த கட்டம்தான் வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வாரியம் வெளியிட்ட அறிக்கையில், "வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் என அனைவரும் திட்டமிட்டபடி இந்தச் சுற்றுப்பயணத்தைத் தொடர வேண்டும்" என்று திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், "இலங்கை வாரியத்தின் இந்த உத்தரவையும் மீறி, எந்தவொரு வீரரோ அல்லது அணி நிர்வாகியோ நாடு திரும்ப முடிவு செய்தால், அவர்களுக்குப் பதிலாக மாற்று வீரர்கள் உடனடியாக பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். சுற்றுப்பயணம் தடையின்றித் தொடரும். மேலும், உத்தரவை மீறிச் சென்றவர்களின் செயல்பாடு குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு, அதன் முடிவில் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்," என்றும் அந்த அறிக்கையில் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் உயர் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான மோஷின் நக்வி, அந்நாட்டின் உள்துறை அமைச்சராகவும் பதவி வகிப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை தனிப்பட்ட முறையில் தீவிரமாக கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த ஒருநாள் தொடரைத் தொடர்ந்து, ஜிம்பாப்வே அணியும் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடரும் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. எனவே, மூன்று அணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது. ஒருபுறம் உயிர் பயம், மறுபுறம் சொந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் மிரட்டல் என இருதலைக் கொள்ளி எறும்பாக இலங்கை வீரர்கள் சிக்கித் தவிப்பது, கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.