கொழும்பு: இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியில் நீடிப்பதற்காக நிர்வாகிகளின் ஆசைக்கு இணங்குமாறு வீராங்கனைகள் வற்புறுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விசாரணை குழு தெரிவித்துள்ளது.
இலங்கை நாட்டு பெண்கள் கிரிக்கெட் அணியில் நீடிக்கவேண்டுமென்றால் நிர்வாகிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வீராங்கனைகள் நிர்பந்தப்படுத்தப்படுவதாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது. இதை தொடர்ந்து இது குறித்து விசாரணை செய்ய கடந்த நவம்பர் மாதம் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நிமல் திஸ்சநாயகே தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவின் விசாரணையில் பெண்கள் கிரிக்கெட் அணி நிர்வாகிகள் பலர், வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு விளையாட்டு அமைச்சகம் நேற்று கூறியுள்ளது.
விரைவில் தவறு செய்த நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ்விவகாரத்தை சிங்கள பத்திரிகை ஒன்றுதான் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.