கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல அடுத்தடுத்து ஆட்டமிழந்த இலங்கை அணி 50 ரன்களில் சுருண்டது. இந்தியாவும், இலங்கையும் ஆசிய கோப்பை வரலாற்றில் 9வது முறையாக இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தியது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கொழும்புவில் நடந்த போட்டிகளில் பெரும்பான்மையாக முதலில் பேட்டிங் செய்த அணிகள் தான் வெற்றி பெற்றது. இதனால், இலங்கை கேப்டன் ஷனாகா இந்த முடிவை எடுத்தார்.

ஆனால், இது தான் வாழ்நாளில் எடுக்க போகும் தவறான முடிவு என்பதை அவர் அப்போது நினைக்கவில்லை. மழை பெய்வது போல் , கருமேகங்கள் சூழ்ந்து இருந்ததால், யாரும் எதிர்பாராத வகையில் பந்து நன்றாக ஸ்விங் ஆனது.
ஆட்டத்தின் மூன்றாவது பந்திலேயே இலங்கை வீரர் குசேல் பெரேரா டக் அவுட் ஆனார். இது இலங்கைக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. ஆனால், அதை விட பெரிய அதிர்ச்சியை முகமது சிராஜ் தனது பவுலிங்கில் காட்ட இருந்ததை யாருமே கணிக்கவில்லை. சிராஜ் தன்னுடைய பந்தை பேச வைக்க, அதற்கு எந்த இலங்கை வீராலும் பதில் சொல்ல முடியவில்லை.
முகமது சிராஜின் அபார பந்துவீச்சால் நிசாங்கா, சமரவிக்ரமா, அசலங்கா, தனஞ்செய்ய டிசில்வா ஆகியோர் ஒரே ஓவரில் ஆட்டமிழக்க இலங்கை அணி 12 ரன்களுக்கு சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. எனினும் இந்த ஓவரில் ஹாட்ரிக் வாய்ப்பை சிராஜ் தவறவிட்டார்.
இதே போன்று சிராஜ் தனது அடுத்த ஓவரில் குசேல் மெண்டீசை கிளின் போல்ட் ஆக்கினார். இதனால் இலங்கை அணி 12 ரன்னில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வெல்லாலகே 8 ரன்களும், ஹேமந்தா 13 ரன்கள் சேர்க்க, ஒரு அளவுக்கு இலங்கை 30 ரன்களில் சுருண்டுவிடாமல் காப்பாற்றப்பட்டது. இதனையடுத்து ஹர்திக் பாண்டியாவும் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, இலங்கை அணி 15.2 ஓவரில் 50 ரன்களில் சுருண்டது. சிராஜ் 6 விக்கெட்டும், ஹர்திக் 3 விக்கெட்டும், பும்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.