கடைசி பந்தில் 5 ரன்கள்.. திக்..திக்.. நொடிகள்.. 30 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை படைத்த இலங்கை அணி
கொழும்பு: இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
2க்கு1 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலையில் இருந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புடன் இந்தப் போட்டி நடைபெற்றது.
இலங்கை அணி சுழற்பந்தவீச்சை வைத்து ஆஸ்திரேலியாவை சமாளிக்க களமிறங்கினர்.

அடுத்தடுத்து விக்கெட்
இலங்கை அணியில் டிக்வெல்லா, நிஷாங்கா ஆகியோர் களமிறங்கினர். டிக்வெல்லா 1 ரன்னிலும், நிஷாங்கா 13 ரன்களிலும், குசேல் மெண்டிஸ் 14 ரன்களிலும் ஆட்டமிழக்க, இலங்கை அணி 34 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. இதனையடுத்து தனஞ்செய் டி சில்வா மற்றும் அசலங்கா ஆகியோர் இணைந்து இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

அசலங்கா சதம்
பொறுப்புடன் விளையாடிய தனஞ்செய் டி செல்வா 60 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடிய அசலங்கா தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். பின்வரிசையில் ஹசரங்கா 21 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, இலங்கை அணி 49 ஓவர் முடிவில் 258 ரன்களுக்கு சுருண்டது.

வார்னர் 99 அவுட்
259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரோன் பிஞ்ச் டக் அவுட்டாக, அதிரடி வீரர் டேவிட் வார்னர் தனி ஆளாக நின்று இலங்கைக்கு நெருக்கடி தந்தார். மிட்செல் மார்ஷ் 26 ரன்கள், மார்னஸ் லாபஸ்சேங் 14 ரன்கள், அலெக்ஸ் கேரி 19 ரன்கள், டிராவிஸ் ஹேட் 27 ரன்கள் எடுத்து பெரிய ஸ்கோர் எடுக்காமல் திரும்பினர்.டேவிட் வார்னர் மட்டும் பொறுப்பாக விளையாடி 99 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.

30 ஆண்டுகளுக்கு பிறகு அபாரம்
விக்கெட்கள் சரிந்தாலும் இறுதியில் பாட் கம்மின்ஸ் 35 ரன்கள் எடுத்து இலங்கைக்கு நெருக்கடி அளித்தார். கம்மின்ஸ் வெளியேற, கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது மேத்தீவ் 3 பவுண்டரிகளையும், ஒரு 2 ரன்களையும் விளாச உச்சக்கட்ட டென்ஷன் எகிறியது. அப்போது, ஒரு பந்துக்கு ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மேத்திவ் தூக்கி அடித்து கேட்ச் ஆனார். இதன் மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி , 30 ஆண்டுகளுக்கு பிறகு சொந்தமண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications