கொழும்பு: தென்னாபிரிக்கா அணிக்கெதிரான ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்னாபிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் வென்றது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்க அணி 3-2 என்ற கணக்கில் வென்றது. இதனை தொடர்ந்து ஒரே ஒரு 20 ஓவர் போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா அணி இலங்கை சுழல் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் 16.4 ஓவர்களில் 98 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணியின் சண்டகன் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
அதனை தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 16 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தடையில் இருந்து மீண்டு வந்த சண்டிமால் ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றியை தேடி தந்தது குறிப்பிடத்தக்கது.
தென்னாபிரிக்கா அணி அடித்த 98 ரன்கள் அந்த அணி 20 ஓவர் போட்டிகளில் அடித்த குறைந்தபட்ச ரன்கள் என்பது குறிப்பிடதக்கது.