கொழும்பு : பாகிஸ்தான் கிரிக்கெட் அணி போல் இலங்கை கிரிக்கெட் அணியும் பல்வேறு சச்சரவுகளை சந்தித்து வருகிறது. 2014 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் வென்ற பிறகு இலங்கை அணி பெரிய அளவில் ஐசிசி தொடரில் சாதிக்கவில்லை.
இன்னும் சொல்லப்போனால் 2022 டி20 உலக கோப்பை, 2024 டி20 உலக கோப்பை என இரண்டு தொடர்களிலும் முதல் சுற்றுகளில் இலங்கை அணி வெளியேறி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பையில் இலங்கை அணி தகுதியே பெறவில்லை.

இதனால் இலங்கை அணி மீது அந்த நாட்டு ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் இலங்கை செய்தித்தாளில் வெளியான செய்தி ஒன்று அந்த நாட்டு ரசிகர்களை வெறுப்படைய செய்தது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் இலங்கை அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இந்த நிலையில் இந்த போட்டிக்கு முன்பு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சரக்கு பார்ட்டியில் பங்கேற்றதாக அந்நாட்டு செய்தித்தாள் குற்றம் சாட்டி இருக்கிறது. அணியின் முதல் லீக் ஆட்டத்திற்கு முன்பு அமெரிக்காவில் வந்ததற்காக இலங்கை வீரர்கள் இந்த பார்ட்டியில் ஈடுபட்டதாகவும் அதன் காரணமாக தான் இலங்கை அணி தோல்வியை தழுவி இருப்பதாகவும் அந்த செய்தி தாள் குறிப்பிட்டு இருக்கிறது.
இதற்கு தான் தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்றும் அது பொய்யான ஜோடிக்கப்பட்ட அடிப்படை ஆதாரமற்ற செய்தி என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள அந்நாட்டு வாரியம் தென்னாபிரிக்கா போட்டிக்கு முன்பு ஹோட்டலில் சரக்கு பார்ட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்றதாக ஒரு செய்தித்தாள் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
அது முற்றிலும் தவறானது. அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை. இப்படி விஷமத்தனமான செய்திகளை வெளியிடுவதன் மூலம் அது இலங்கை கிரிக்கெட் அணியின் இமேஜை அது பாதிப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இது போன்ற செய்தியை வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம், சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனம் மறுப்பு செய்தியை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.