தோனி சொன்னாரே கேட்டீங்களா? சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட இலங்கை.. பதிராணா விசயத்தில் அவசரம்
ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றியதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இலங்கை அணியின் 21 வயது வீரரான மதிஷா பதிராணா.
ஐபிஎல் தொடரில் பதிராணா முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்துவார். இதனால் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு ஒரு கோரிக்கை வைத்திருந்தார்.

அதில் பதிராணாவை குறைந்தபட்சம் டி20 போட்டியில் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும் ஒருநாள் போட்டிகளில் முக்கிய தொடர்களில் பதிராணாவை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தார். டெஸ்ட் போட்டிக்கு பதிராணா போகவே கூடாது என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். ஐசிசி தொடர்களில் பதிராணாவை பயன்படுத்துங்கள். பதிராணா இலங்கை அணியின் சொத்து என்றும் அவர் பாராட்டி இருந்தார்.
இந்த நிலையில் தோனியின் பேச்சை இலங்கை கிரிக்கெட் வாரியம் கேட்கவில்லை. இதனால் முக்கியத்துவம் இல்லாத ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பதிராணாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் விளையாட வைத்தது. ஐபிஎல் தொடரில் விளையாடிய இரண்டு நாட்களில் பதிராணா அவசர அவசரமாக தனது முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியில் விளையாடினார்.
ஐபிஎல்லில் கலக்கியது போல் பதிராணா இதிலும் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பதிராணா 8 புள்ளி 5 ஓவர்கள் வீசி 66 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதில் ஒரு விக்கெட் மட்டுமே அடங்கும். அதாவது ஒரு ஓவருக்கு சுமார் 8 ரன்கள் பதிராணா கொடுத்திருக்கிறார்.இதனால் இலங்கை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிஎஸ்கே வில் சிறப்பாக செயல்பட்ட பதிராணா இலங்கை அணிக்கு வந்ததும் எப்படி சொதப்பினார் என்று பலரும் தங்களது சந்தேகத்தை கேட்டு வருகின்றனர்.
இதற்கு பதில் அளித்துள்ள இந்திய ரசிகர்கள் பதிரானாவை எப்படி பயன்படுத்துவது என்பது தோனிக்கு நன்றாக தெரிந்திருந்தது.அது உங்கள் அணி வீரர்களுக்கு தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் பதிராணாவை இது போன்ற போட்டிகளில் விளையாடினால் அவருடைய பந்துவீச்சு பாதிக்கப்படும் என்றும் தோனி சொன்னது போல் கேட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தயவு செய்து பதிராணாவை இதுபோன்ற போட்டிகளில் விளையாட வைக்காமல் அவருக்கு போதிய ஓய்வு கொடுங்கள். தோனி சொல்வதைக் கேளுங்கள் என்று சிஎஸ்கே ரசிகர்கள் அறிவுரை கூறியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications