உலக கோப்பையில் இலங்கை படைத்த மோசமான சாதனை.. ஜிம்பாப்வே ரெக்கார்ட் முறியடித்த பரிதாபம்
புனே : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி நான்கு போட்டிகளில் தோல்வியைத் தழுவி வெறும் 4 புள்ளிகளை மட்டுமே பெற்று பரிதாபமான நிலையில் இருக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு கீழ் புள்ளி பட்டியலில் இலங்கை இருக்கிறது. கத்துக்குட்டி அணியாக கிரிக்கெட்டுக்கு வந்து பின் உலக கிரிக்கெட்டையே ஆட்டிப்படைத்த வல்லமையாக இலங்கை அணி உயர்ந்தது.

1996 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்று அசத்திய இலங்கை அணி அதன் பிறகு 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை வந்து அசத்தியது. ஆனால் அப்படிப்பட்ட இலங்கை அணி இன்று கிரிக்கெட்டில் மோசமான சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. இலங்கை அணியில் இருந்து எப்போது சங்ககாரா, ஜெயவர்த்தனே, தில்சான், முரளிதரன், மலிங்கா போன்ற வீரர்கள் சென்றார்களோ அவர்களுக்கு மாற்று வீரர்கள் அணிக்குள் வந்தாலும் அவர்களைப் போன்ற ஒரு சாம்பியன் ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்துவதில் தடுமாறுகிறார்கள்.
அதன் விளைவாக இலங்கை அணி குறிப்பிடத் தகுந்த வெற்றியை பெறாமல் தவித்த நிலையில் தற்போது ஆப்கானிஸ்தானிடம் கூட தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த வகையில் உலககோப்பை வரலாற்றில் ஒரு மோசமான சாதனையை இலங்கை படைத்திருக்கிறது. அதன்படி உலக கோப்பை வரலாற்றில் அதிக தோல்விகளை சந்தித்த அணி என்ற பெருமையை தற்போது இலங்கை பெற்றிருக்கிறது. முன்னதாக 42 தோல்விகளை பெற்று ஜிம்பாப்வே முதலிடத்தில் இருந்த நிலையில் தற்போது அவர்களை முறியடித்து 43 தோல்விகளை இலங்கை பெற்று இருக்கிறது.
மூன்றாவது இடத்தில் 37 தோல்விகளுடன் இங்கிலாந்தும், நான்காவது இடத்தில் 36 தோல்விகளுடன் பாகிஸ்தானும், ஐந்தாவது இடத்தில் 35 தோல்விகளுடன் நியூசிலாந்தும் அதே 35 தோல்வியுடன் வெஸ்ட் இண்டீஸ் அணியும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள்.இதேபோன்று ஆப்கானிஸ்தான அணி உலக கோப்பை போட்டியில் முதல் 17 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பெற்ற நிலையில் தற்போது கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று ஆட்டங்களில் வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications