கொழும்பு: ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் முகமது சிராஜ் பந்துவீச்சில் அடுத்தடுத்த இலங்கை பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்து வெளியேறியதால், இலங்கை ரசிகர்கள் மைதானத்தில் கண்ணீருடன் அமர்ந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்த்து இலங்கை அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கொழும்பு மைதானம் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதோடு, முதலில் பேட்டிங் செய்த அணியே அதிக முறை வென்றிருக்கிறது என்பதால், இலங்கை அணி இம்முறை பேட்டிங்கை எடுத்தது. அதேபோல் டாஸ் வென்ற நாங்களும் பேட்டிங்கையே தேர்வு செய்திருப்போம் என்று ரோகித் சர்மாவும் பேசி இருந்தார்.

ஆனால் இலங்கை அணி கேப்டன் ஷனகாவின் முடிவு மிகப்பெரிய தவறு என்பதை இந்திய அணியின் சிராஜ் நிரூபித்தார். அவர் வீசிய 4வது ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். அதுமட்டுமல்லாமல் அடுத்தடுத்த ஓவர்களிலும் சிராஜ் விக்கெட்டுகளை கைப்பற்றியதால், 12 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தவித்தது. இதன்பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மொத்தமாக இலங்கை அணி 50 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
இந்திய அணி தரப்பில் சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், பும்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனால் இலங்கை ரசிகர்கள் மைதானத்தில் சோகத்துடன் அமர்ந்திருந்தனர். இன்று காலை ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்து அதிவிரைவாக விற்றுத் தீர்ந்தன. நடப்பு சாம்பியன் பட்டத்தை இலங்கை அணி தக்க வைக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் மைதானத்திற்கு வந்து ஆதரவு அளித்தனர்.
ஆனால் சிராஜின் ஸ்பெல்லை பார்த்த இலங்கை ரசிகர்கள் மைதானத்தில் கண்ணீருடன் இருந்தனர். ரசிகைகள் இருவர் கண்ணீருடன் அழுத வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியது. ஒரு கட்டத்தில் வர்ணனையில் இருந்த ஆர்ஜே பாலாஜி, டெம்போவெல்லாம் வச்சு கடத்தியிருக்கோம் என்று கலாய்க்க தொடங்கினார். அதேபோல் இலங்கை அணி குறைந்தபட்ச ஒருநாள் ஸ்கோர் சாதனையை முறியடிக்கும் என்று பார்க்கப்பட்ட நிலையில், வெற்றிகரமாக அந்த சாதனையை படைக்காமல் தப்பித்தது குறிப்பிடத்தக்கது.