டெல்லி: ஆஸ்திரேலியாவுடனான ஒருதினப் போட்டித் தொடர் முடிந்து விட்டது. அடுத்ததாக மூன்று டி-20 போட்டிகள் உள்ளன. அதற்கடுத்து, நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு வருகிறது. அதைத் தொடர்ந்து, நவம்பர், டிசம்பரில் இலங்கை அணி இந்தியாவுக்கு வர உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து பல்வேறு நாடுகளுடன் விளையாடி வருகிறது. சமீபத்தில் இலங்கைக்கு சென்று, 5 ஒருதினப் போட்டி, 3 டெஸ்ட், ஒரு டி-20 போட்டிகளில் 9-0 என்ற கணக்கில் வென்று அபார சாதனை புரிந்து வந்துள்ளது.

அடுத்ததாக ஆஸ்திரேலியா அணி இந்தியா வந்துள்ளது. 5 ஒருதினப் போட்டித் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. மூன்று டி-20 போட்டிகள், வரும் 7ம் தேதி துவங்குகிறது.
ஆஸ்திரேலிய தொடர் முடிந்த உடன், நியூசிலாந்து அணி, இந்தியா வருகிறது. 3 ஒருதினப் போட்டி, 3 டி-20 போட்டிகளில் நியூசிலாந்து விளையாட உள்ளது.
அக்டோபர் 22ம் தேதி மும்பையில் முதல் ஒருதினப் போட்டி நடக்கிறது. அதன்பிறகு அக். 25ம் தேதி புனேயிலும், அக். 29ல் கான்பூரிலும் அதற்கடுத்த ஒருதினப் போட்டிகள் நடக்கின்றன.

நவ. 1ல் டில்லி, நவ. 4ல் ராஜ்கோட், நவ. 7ல் திருவனந்தபுரத்திலும், டி-20 போட்டிகள் நடக்க உள்ளன.
அதற்கடுத்து நவம்பரில் இலங்கை அணி இந்தியாவுக்கு வருகிறது. இந்தியாவுக்கு ராசியான 9 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை விளையாட உள்ளது, தலா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருதினப்போட்டி மற்றும் டி-20 போட்டிகள் நடக்க உள்ளன. அதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி கோல்கத்தா ஈடன் கார்டனில், நவ., 16 முதல் 20 வரை நடக்க உள்ளது. இரண்டாவது டெஸ்ட் நவ. 24 முதல் 28 வரை நாக்பூரிலும், மூன்றாவது டெஸ்ட், டிசம்பர் 2 முதல் 6 வரை டில்லியிலும் நடக்க உள்ளது.

தர்மசாலாவில், டிச., 10ல் முதல் ஒருதினப் போட்டி நடக்கிறது. அதன்பிறகு, டிச. 13ல் மொகாலி, டிச. 17ல் விசாகபட்டினத்தில் அடுத்த ஒருதினப் போட்டிகள் நடக்கின்றன.
கட்டாக்கில் டிச. 20, இந்தூரில் டிச. 22, மும்பையில், டிச.24ல் டி-20 போட்டிகள் நடக்க உள்ளன.
இந்திய வீரர்களுக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் இனி செம வேட்டைதான்.