
பாகிஸ்தானில் கிரிக்கெட் வீரர்களின் மீது தாக்குதல்
ஒவ்வொரு நாட்டிலும் எப்போதாவது கிரிக்கெட் வீரர்கள் மீது எதிர்பாராத வகையில் தாக்குதல் நடத்தப்படும். பெரும்பாலும் மிகவும் சிறிய அளவிலேயே இந்த தாக்குதல்கள் இருந்து வந்துள்ளன. ஆனால் 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த இலங்கை வீரர்கள் மீதான தாக்குதல் யாராலும் மறக்க முடியாத ஒன்றாகும். பாகிஸ்தானின் கடாபி மைதானத்திற்கு வெளியில் நடந்த இந்தத் தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஹெலிகாப்டரில் வீரர்கள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது அப்போது வைரல் ஆனது.

பாகிஸ்தானில் கிரிக்கெட் நடத்த எதிர்ப்பு
இந்த தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் நாட்டில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற அனைத்து நாடுகளும் மறுப்பு தெரிவித்து வந்தன. அந்தத் தாக்குதலில் சில வீரர்களும், பணியாளர்களும் காயம் அடைந்ததை அடுத்து, பாகிஸ்தானில் கிரிக்கெட் நடத்த ஐசிசி மறுப்பு தெரிவித்து வந்தது. தொடர்ந்து பல ஆண்டுகளாக இதனால் அங்கு கிரிக்கெட் போட்டியே நடக்கவில்லை. தற்போது இந்த விவகாரம் மீண்டும் பெரிதாகி உள்ளது.

ஆட மறுக்கும் இலங்கை வீரர்கள்
இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களைக் காரணம் காட்டி இலங்கை அணி வீரர்கள் பாகிஸ்தானில் விளையாட மறுப்பு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் விளையாட முடியாது என இதுவரை 40 வீரர்கள் கடிதம் எழுதி அனுப்பி உள்ளனர். அவர்கள் கையெழுத்துடன் இந்தக் கடிதம் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அணியின் முக்கியமான வீரர்கள் பலரும் கடிதம் எழுதியுள்ளனர்.

பிரச்சனையில் இலங்கை கிரிக்கெட் வாரியம்
இந்த நிலையில் இந்த மாதம் லாகூரில் நடக்க இருந்த பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டியை எப்படி நடத்துவது என தெரியாமல் குழம்பி உள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம். இதில் கையெழுத்து இடாத வீரர்களை வைத்து போட்டியை நடத்தலாமா என யோசித்து வருகிறது அந்நாட்டு வாரியம். மேலும் இந்த சம்பவம் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது "எங்களால் முடிந்த அனைத்து விஷயங்களையும் முயல்கிறோம். எப்படியும் இந்தப் போட்டியை நடத்துவோம்'' என நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











