கொழும்பு : இலங்கை ஒருநாள் மற்றும் டி20 போட்டி அணியின் கேப்டன் ஆஞ்சலோ மாத்யூஸ்-ஐ கேப்டன் பதவியில் இருந்து விலகுமாறு கூறியுள்ளது இலங்கை கிரிக்கெட் போர்டு.
ஆசிய கோப்பை தொடரில் இலங்கை குரூப் சுற்றோடு வெளியேறியது. ஆசிய கோப்பை குரூப் சுற்றில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக தோல்வி அடைந்தது இலங்கை. இதனால், சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற முடியாமல், நாடு திரும்பியது அந்த அணி.

அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இலங்கை சொந்த மண்ணில் ஆட உள்ளது. ஏற்கனவே டெஸ்ட் அணிக்கு தினேஷ் சண்டிமால் கேப்டனாக இருக்கிறார். அவரையே ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்க இலங்கை போர்டு முடிவு செய்துள்ளது.
அதை அடுத்து, தற்போதைய கேப்டன் ஆஞ்சலோ மாத்யூஸ்-ஐ பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டுள்ளது இலங்கை கிரிக்கெட் போர்டு.
தினேஷ் சண்டிமால் அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை 7 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டன் பதவி வகித்துள்ளார். அதில் 5 போட்டிகளை வென்றுள்ளார். மாத்யூஸ் இதுவரை 106 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து, அதில் 49 வெற்றிகள், 51 தோல்விகள் பெற்றுள்ளார்.
இலங்கை, இங்கிலாந்து அணிக்கு எதிராக வரும் அக்டோபர் 10 முதல் விளையாட உள்ளது. இந்த தொடரில் 5 ஒருநாள் போட்டிகள், 1 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன.