
ஊதிய பிரச்னை
இலங்கை வாரியம் சமீபத்தில் புதிய ஊதிய ஒப்பந்தத்தை வெளியிட்டது. அதில் வீரர்களுக்கு செயல்பாடுகளின் அடிப்படையில் இனி ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீனியர் வீரர்கள் பலரும் போர்க்கொடி தூக்கினர். சிலர் சர்வதேச போட்டிகளிலும் விளையாட மறுப்பு தெரிவித்து வந்தனர். இதன் காரணமாக பிரச்னை முடியும் வரை ஒவ்வொரு தொடருக்கும் தனித்தனியாக ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது.

நட்சத்திர வீரர் ஓய்வு
இந்நிலையில் இலங்கை அணியின் சீனியர் வீரர் ஏஞ்சிலோ மேத்யூஸ் ஓய்வு பெற விரும்புவதாக தெரிவித்துள்ளது அந்நாட்டு அணிக்கு பெரும் இடியை இறக்கியுள்ளது. 34 வயதாகும் மேத்யூஸ், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நீண்ட நாட்களாக தோன்றாமல் உள்ளார். கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மட்டும் அவர் பங்கேற்றார். புதிய ஊதிய ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் முக்கிய நபராக இருந்த மேத்யூஸ் தற்போது இந்த முடிவை எடுத்துள்ளார்.

மேத்யூஸின் தகவல்
அவர் இதுகுறித்து இலங்கை வாரியத்திற்கு அனுப்பியுள்ள தகவலில், தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து சிந்தித்து வருவதாகவும், வரும் வாரங்களில் அது கூறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் கூறியுள்ளார். இலங்கை அணியில் சங்ககாரா, ஜெயவர்தனே, டில்சன் ஆகியோர் இருந்த போதே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட மேத்யூஸ் பின்னர் 2017ம் ஆண்டு கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். தற்போதுள்ள இலங்கை அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர் என்றும் அவரை கூறலாம்.

அனுபவம்
இதுவரை அவர் 90 டெஸ்ட் போட்டிகள், 218 ஒருநாள் போட்டிகள் மற்றும் 49 டி20 போட்டிகளில் விளையாடி 13, 219 ரன்களை குவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் பவுலிங்கில் 191 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதனால் இருந்த ஒரு அனுபவ வீரரையும் இழந்து தற்போது பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது இலங்கை கிரிக்கெட் அணி.


Click it and Unblock the Notifications











