கொழும்பு: அகிலா தனஞ்சயா அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்களை வீழ்த்த, கடைசி ஒருதினப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 178 ரன்களில் வென்றது இலங்கை. இருந்தாலும் தென்னாப்பிரிக்கா 3-2 என தொடரை வென்றது.
தென்னாப்பிரிக்கா அணி இலங்கையில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 2-0 என இலங்கை வென்றது. அதைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடர் நடந்தது. முதல் 3 போட்டிகளிலும் வென்று தென்னாப்பிரிக்கா தொடரைக் கைப்பற்றியது.
நான்காவது போட்டியில் இலங்கை வென்றது. இந்த நிலையில் 5வது போட்டி கொழும்புவில் நேற்று நடந்தது. இதில் 178 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வென்றது.
முதலில் விளையாடிய இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்தது. ஆஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள், நிரோஷன் டிக்வெல்லா 43, குசால் மென்டிஸ் 38 ரன்கள் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்கா 24.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. குயின்டன் டிகாக் அதிகபட்சமாக 54 ரன்கள் எடுத்தார். 7 பேர் ஒற்றை இலக்க ரன்களையே எடுத்தனர்.
இலங்கையின் அகிலா தனஞ்சயா 9 ஓவர்களில் 29 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். இரண்டு முறை 6 விக்கெட்கள் வீழ்த்திய ஸ்பின்னர்கள் வரிசையில் நான்காவது பவுலராக தனஞ்சயா இணைந்தார்.
இந்த ஆட்டத்தில் 178 ரன்களில் இலங்கை வென்றது. தென்னாப்பிரிக்கா 3-2 என தொடரை வென்றது.